பிறப்பு சான்றிதழ் இல்லை.. ஆதார் எடுப்பதில் பிரச்சனை.. திருவள்ளூர் விவகாரத்தில் தமிழக அரசு விளக்கம்
சென்னை: தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் "பிரதமர் மோடி நரிக்குறவர் சமுதாயத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தார். ஆனால் இங்கு அதே சமூகத்தை சேர்ந்த மாணவனை பிறப்பு சான்றிதழ், ஆதார் கார்டு இல்லாத காரணத்துக்காக அரசு பள்ளியில் சேர்க்க திமுக அரசு மறுக்கிறது என்று குற்றம்சாட்டினார். இந்த தகவலை மறுத்துள்ள தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இன்றைக்கு ஆதார் கார்டு இல்லாவிட்டால் ஒருவர் பள்ளியில் சேர்ப்பது தொடங்கி கல்லூரி படிப்பு, கல்வி உதவி தொகை, வங்கி கணக்கு தொடங்குவது என எல்லாவற்றிலும் சிக்கல் நிலவுகிறது. ஆனால் ஆதார் கார்டு புதிதாக வாங்க வேண்டும் என்றால் பிறப்பு சான்றிதழ் வேண்டும்.

பிறப்பு சான்றிதழ் இல்லாமல் ஒருவர் ஆதார் கார்டு பெற முடியாது. பிறப்பு சான்றிதழ் அடிப்படையில் மட்டுமே ஆதார் கார்டு தற்போது வழங்கப்படுகிறது. பிறப்பு சான்றிதழில் என்ன தவறு இருந்தாலும், அதில் உள்ளபடியே சான்றிதழ் வழங்கப்படுகிறது. பிறப்பு சான்றிதழில் இனிஷியல் அந்த காலத்தில் எல்லாம் இருக்காது. அதேபோல் ஆதார் கார்டும் இனிஷயல் இல்லாமல் மட்டுமே வழங்கப்படுகிறது. இது ஒரு வகையில் சிக்கலாக மாறி இருக்கிறது.
இந்த சூழலில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் "பிரதமர் மோடி நரிக்குறவர் சமுதாயத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தார். ஆனால் இங்கு அதே சமூகத்தை சேர்ந்த மாணவனை பிறப்பு சான்றிதழ், ஆதார் கார்டு இல்லாத காரணத்துக்காக அரசு பள்ளியில் சேர்க்க தி.மு.க. அரசு மறுக்கிறது. இதுதான் சமீபத்தில் வெளியிடப்பட்ட மாநில கல்விக்கொள்கையின் ஒரு பகுதியா?" என்று பதிவிட்டிருந்தார்.
மேலும் அந்த மாணவன் தனது பெற்றோருடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வீடியோவையும் வெளியிட்டு இருந்தார். இதனை பலரும் பகிர்ந்தனர். இது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. மேலும் மாணவரின் சேர்க்கை நீக்க பதிவேடு, வருகை பதிவேடையும் வெளியிட்டிருக்கிறது. இதுகுறித்து தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், "வீடியோவில் இடம்பெற்ற மாணவன் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் உள்ள திருவள்ளுவர் அரசு உதவி பெறும் பள்ளியில் 2023-ல் இருந்து பயின்று வருகிறார். பள்ளியில் சேர்க்க மறுத்ததாக கூறும் தகவல் முற்றிலும் பொய்யானது.
11.8.25 அன்று அவரது பெற்றோர் ஆதார் அட்டை எடுப்பதாக கூறி மாணவனை பள்ளியில் இருந்து அழைத்து சென்றுள்ளனர். ஆதார் அட்டை எடுப்பதில் உண்டான காலதாமதத்தால் தாசில்தார் அலுவலகத்தில் வீடியோ எடுக்கப்பட்டு உள்ளது.
ஆனால், மாணவனை பள்ளியில் சேர்க்கவில்லை என்று வதந்தி பரப்பி வருகின்றனர். அந்த மாணவனுக்கு பிறப்பு சான்றிதழ் இல்லை என்பதால் ஆதார் அட்டை எடுப்பதில் சிக்கல் இருந்துள்ளது. ஒரு வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு பிறப்பு சான்றிதழ் பெற வருவாய் கோட்டாட்சியரை அணுக வேண்டும். அதுகுறித்த வழிகாட்டுதல் இல்லாத காரணத்தால் இந்த சம்பவம் நடந்துள்ளது. தற்போது அந்த மாணவனுக்கு கோட்டாட்சியரால் பிறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. வதந்தியைப் பரப்பாதீர்கள்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications