தமிழகத்தில் பெரிய ஜவுளி, நகைக் கடைகள், பல்பொருள் அங்காடிகளை நாளை முதல் மூட உத்தரவு
சென்னை: தமிழகத்தில் நாளை முதல் பெரிய ஜவுளி கடைகள், நகைக் கடைகள், பல்பொருள் அங்காடிகளை மூடுவதற்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் உக்கிரமடைந்து வருகிறது. இந்தியாவில் 4 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். 170க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
தமிழகத்தின் முக்கிய கோவில்கள் அனைத்திலும் பக்தர்கள் வழிபாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் பெரிய ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள், பல்பொருள் அங்காடிகளை நாளை முதல் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் மருந்து கடைகள், காய்கறி கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் செயல்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால் வாரச்சந்தைகள் மார்ச் 31-ந் தேதி வரை மூடுவதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் என வதந்திகளை யார் பரப்பினாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி திரிபாதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications