10.5 சதவீத உள் இடஒதுக்கீடு ரத்து.. தமிழக அரசின் அடுத்த நடவடிக்கை என்ன?.. அமைச்சர் பொன்முடி விளக்கம்!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றியது. தேர்தலுக்கு பிறகு ஆட்சி அமைத்த தி.மு.க அரசு வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு தொடர்பாக அரசாணை வெளியிட்டது.
இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினரும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வன்னியர்களுக்கான உள் இடஒதுக்கீட்டை ரத்து செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

ராமதாஸ் அதிர்ச்சி
இதனால் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்பட பலரும் அதிர்ச்சி அடைந்தனர். உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று ராமதாஸ் கோரிகை விடுத்தார். இந்த விவகாரம் தொடர்பாக பா.ம.க நிர்வாகிகள் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட பா.ம.க.வினர் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்கள்.

மேல்முறையீட்டிற்கு செல்லும்
இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு ரத்து குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்கள். அதற்கு பதில் அளித்த அமைச்சர் ''10.5 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழ்நாடு அரசு மேல்முறையீட்டிற்கு செல்ல உள்ளது. நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை பல்கலைக்கழகங்களில் அமல்படுத்துவோம்' என்று கூறினார்.

தொழில்நுட்ப கல்வி விரிவுரையாளர்களுக்கான தேர்வு
இதனை தொடர்ந்து அவர் மேலும் கூறியதாவது:- தொழில்நுட்ப கல்வி விரிவுரையாளர்களுக்கான தேர்வு மையங்கள் வெகு தூரத்தில் உள்ள காரணத்தினால் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது இந்த தேர்வு எழுத பலரும் ஆர்வம் காட்டியதால் ஏற்கனவே 120 மையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது 200 மையங்களில் தேர்வு எழுத நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அச்சம் கொள்ளத் தேவையில்லை
தற்போது தேர்வு எழுதும் மாணவர்கள் 100 கி.மீ க்குள் உள்ள மையங்களில் தேர்வு எழுதுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நவம்பர் மாதத்தில் வங்கி தேர்வு மற்றும் நெட் தேர்வு எழுதுபவர்களுக்கும் வசதியாக வரும் டிசம்பர் 8-ஆம் தேதி முதல் ஐந்து நாட்கள் தேர்வு எழுதுவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே தேர்வர்கள் தேர்வு நடக்குமா? நடக்காதா? என்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை. 1060 பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் பணியிடத்திற்கு, ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 140 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications