தட்டித்தூக்கிய திமுக.. காலியான அதிமுக..மல்லுகட்டும் சுயேட்சைகள் - பேரூராட்சிகளை ஆளப்போவது யார்?
சென்னை: நடந்து முடிந்துள்ள நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என அனைத்திலும் திமுக மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துவருகிறது. 489 பேரூராட்சிகளில் 367 இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது.
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
நண்பகல் 2 மணி நிலவரப்படி ஒட்டு மொத்தமாக 21 மாநகராட்சிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஒட்டுமொத்த இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. தமிழகம் முழுதும் உள்ள 138 நகராட்சிகளில் திமுக125, அதிமுக - 5 மற்றும் பிற கட்சிகள் 4 நகராட்சிகளையும் கைப்பற்றியுள்ளன.

பேரூராட்சி
மொத்தமுள்ள 489 பேரூராட்சிகளில் 7605 பதவிகளுக்கான ஓட்டு எண்ணிக்கையில் பெரும்பாலான இடங்களில் திமுக முன்னிலையில் உள்ளது. 2 மணி நிலவரப்படி பேரூராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 4103 இடங்களில் திமுக வெற்றி பெற்று முன்னிலையில் இருக்கிறது. திமுகவுக்கு அடுத்த படியாக இதரகட்சிகள் 1156 வார்டிலும், அதிமுக 1140, காங்கிரஸ் 311, பாஜக 166, சிபிஎம் 70, சிபிஐ 24, தேமுதிக 19, நாம் தமிழர் - 8 மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி 1 வார்டிலும் வெற்றி பெற்றுள்ளது.

வாக்கு எண்ணிக்கை
தமிழகம் முழுவதும் உள்ள 489 பேரூராட்சிகளில் தற்போது வரை திமுக 367 இடங்களிலும், அதிமுக - 25, பிற - 35, பாஜக - 3, பாமக -3, அமமுக -1, தேமுதிக - 0
நாதக -0, மநீம - 0 இடங்களில் வெற்றியைப் பதிவு செய்து வருகின்றனர். இன்று மாலை வரை வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தற்போது வரை 489 இடங்களில்
445 பேரூராட்சிகளுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. மீதமுள்ள இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

திமுக
விருதுநகரில் இருக்கும் 9 பேரூராட்சியையும் திமுகவே கைப்பற்றியுள்ளது. கள்ளக்குறிச்சியில் 5 பேரூராட்சியும் திமுக வசம் வந்துள்ளது. மயிலாடுதுறையிலும் நான்குக்கு நான்கு என திமுக வென்றுள்ளது. திருவாரூரில் 7 க்கு 7 இடமும் திமுக வசம் வந்துள்ளது. திருப்பத்தூர், வேலூர், விழுப்புரம் என பல மாவட்ட பேரூராட்சியை மொத்தமாக கைப்பற்றியுள்ளது.

அதிமுக
திமுகவுக்கு அடுத்தபடியாக பேரூராட்சிகளில் சுயேட்சைகள் அதிக வெற்றிகளைப் பெற்றுள்ளார்கள். கன்னியாகுமரியில் உள்ள 51 பேரூராட்சியில் அதிமுக 6 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. ராமநாதபுரத்தில் 7ல் 3 வெற்றி, சிவகங்கையில் 10ல் 4 வெற்றி, செங்கல்பட்டில் 4ல் 2 வெற்றி என இந்த மாவட்டங்களில் மட்டும் தான் அதிகபட்ச வெற்றிகளை அதிமுக பதிவு செய்துள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் அதிமுக எந்த பேரூராட்சியையும் கைப்பற்றவில்லை. அதிமுக-வின் கோட்டியாக கருதப்பட்ட கொங்கு மண்டலத்திலும் அதிமுக மிகப்பெரிய தோல்வியைத் தழுவியுள்ளது. அதிமுக-வுக்கு அடுத்த இடத்தில் பாஜக உள்ளது.












Click it and Unblock the Notifications