பன்வாரிலால் முதல் பிரஜ்வல் ரேவண்ணா வரை.. இந்தியாவை உலுக்கிய அரசியல்வாதிகள் மீதான பாலியல் சர்ச்சைகள்
சென்னை: இந்தியாவில் பாலியல் குற்றச்சாட்டுகளில் இதுவரை சிக்கி தண்டனைப் பெற்றவர்கள் யார்? அவர்கள் எந்த மாநிலத்தில் இருக்கின்றனர்.
கர்நாடக அரசியல் களம் அதிரிபுதிரியாக உருமாறி உள்ளது. அதற்குக் காரணம் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ஜனதா தளம் (மதச்சார்பற்ற) கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக எழுந்துள்ள பாலியல் புகார்.

ரேவண்ணா சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் 'ஆபாசமான வீடியோக்கள்' தேர்தல் களத்தில் காங்கிரஸ் கட்சியினருக்கு மிகப்பெரிய ஆயுதமாகக் கிடைத்துள்ளது.
ரேவண்ணாவின் வீட்டில் உதவியாளராகப் பணிபுரிந்த பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
அந்தப் புகாரின் பேரில் கர்நாடக காவல்துறையால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் இவரது மகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
47 வயதான பிரஜ்வாலின் வீட்டுப் பணிப் பெண், இந்தக் குற்றச்சாட்டு அவரது தந்தையும் ஹோலேநரசிபூர் சட்டமன்ற உறுப்பினருமான ஹெச்டி ரேவண்ணாவையும் குற்றவாளி எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
இது தொடர்பாகக் கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஹோலேநரசிபூர் காவல் நிலையத்தில் கடந்த 28ஆம் தேதி வழக்கும் பதிவாகியுள்ளது.
ஆனால், ரேவண்ணா இந்தப் புகார் தொடர்பாகக் கடந்த 28-ம் தேதி அன்று புகார் அளித்துள்ளார். அதாவது இவருக்கு எதிராக வைரல் ஆகும் வீடியோக்கள் அனைத்தும் "மார்ஃபிங்" செய்யப்பட்டவை என்றும், "தனது நற்பெயரைக் கெடுக்கவும், வாக்காளர்களின் மனதில் விஷத்தை ஏற்படுத்தவும் இவை பரப்பப்படுவதாகவும் அதில் கூறியிருந்தார்.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் அரசியல்வாதி ஒருவர் மீது முன்வைக்கப்படுவது இது ஏதோ முதல் முறையல்ல. பல அரசியல் தலைவர்கள் இதே மாதிரி சிக்கியுள்ளனர். ஆனாலும் முடிவுக்கு வராத தொடர்கதையாக இன்னும் நீண்டுகொண்டேதான் செல்கிறது.
பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு முன்னதாக கடந்த காலங்களில் பாலியல் குற்றஞ்சாட்டப்பட்ட முக்கிய அரசியல்வாதிகளைப் பற்றி பட்டியல் போடுகிறது இந்தக் கட்டுரை.
முன்னாள் ஆளுநர் வி.சண்முகநாதன்:
தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.சண்முகநாதன் கடந்த 2015 ஆம் ஆண்டு மேகாலயா ஆளுநராக நியமிக்கப்பட்டார். இவர் திருமணம் செய்து கொள்ளாமல் 40 ஆண்டுகளாக ஆர்.எஸ்,எஸ். அமைப்பில் தீவிரமாக இயங்கி வந்தவர். ஆகவே இவரை பாஜக அரசு ஆளுநராக நியமித்தது.

இவர் கூடுதலாக அருணாச்சலப் பிரதேசத்தின் ஆளுநராகவும் பொறுப்பு வகித்து வந்தார். அப்போது அவர் மீது ஆளுநர் மாளிகை மாண்புக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்து விட்டதாகவும் மாளிகையில் பணி செய்யும் பெண் ஊழியர்களிடம் பாலியல் சில்மிஷங்கள் செய்துவந்ததாகவும் புகார் எழுந்தது.
இவர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் 100 ஊழியர்கள் அன்றைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் எழுதினார். அது அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பி இருந்தது.
முன்னாள் பன்வாரிலால் புரோஹித்:
கடந்த 2018 ஆம் ஆண்டு பேராசிரியை நிர்மலா தேவி கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த விவகாரத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் பெயர் இடம் பெற்றது.
இந்த விவகாரம் தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து. அதனையடுத்து ஆளுநர் பன்வாரிலால் சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் விளக்கம் அளிப்பதற்காகச் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பெண் நிருபர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளிக்காமல் அவரது கன்னத்தைத் தடவிக்கொடுத்தார்.
அந்த விவகாரம் மேலும் பூதாகரமாக வெடித்தது. அதன்பின்னர் அவர் 2021இல் பஞ்சாப் மாநிலம் மாற்றப்பட்டார். இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார்.
அந்த வழக்கில் நேற்று இவரைக் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்து உத்தரவிட்டது. இவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையை வழங்கி தீர்ப்பளித்தது.
பிரிஜ் பூஷன் சரண் சிங்:
கடந்த ஆண்டு ஜனவரி 2023 இல் உ.பி.யில் உள்ள கைசர்கஞ்ச் தொகுதியில் பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினரான பிரிஜ் பூஷன் சரண் சிங், பாலியல் புகார்களில் சிக்கினார்.
அவருக்கு எதிராக எஃப்.ஐ.ஆரில் ஆறு புகழ்பெற்ற பெண் மல்யுத்த வீரர்கள் சாட்சியம் அளித்தனர்.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக பிரிஜ் பூஷன் பதவிவகித்த காலத்தில் தங்களிடம் அவர் தவறாக நடந்துகொண்டதாக அவர்கள் கூறியிருந்தனர். அந்தக் குற்றச்சாட்டு மிகப்பெரிய அளவில் சர்ச்சையானது.
கடந்த வாரம், பாலியல் துன்புறுத்தல் வழக்கில் மேலும் விசாரணை கோரிய சிங்கின் மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கில் பாஜக எம்.பி.க்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்த தனது முடிவை மே 7 ஆம் தேதி நீதிமன்றம் அறிவிக்க உள்ளது.
கரன் மோர்வால்:
இவரைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 2022 ஆம் ஆண்டில், பட்நகர் காங்கிரஸ் எம்எல்ஏ முரளி மோர்வாலின் மகன் கரண் மோர்வால் மீது கற்பழிப்பு குற்றச்சாட்டுகள் பதிவாகின.
அதன் காரணமாக, மத்தியப் பிரதேச காங்கிரஸ் கமிட்டி கரண் மோர்வாலை கட்சியிலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு வெளியேற்றுவதாக அறிவித்தது.

இந்தூரில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் கரண் மீது ஒரு பெண் பலாத்கார புகாரளித்ததை அடுத்து, அக்டோபர் 2021 இல் கரண் கைது செய்யப்பட்டார்.
2024 மார்ச் 6 அன்று, கரண் திக்விஜய் சிங் மற்றும் பிற காங்கிரஸ் தலைவர்களுடன் இணைந்து எடுத்துக் கொண்ட படங்களை வெளியிட்டார் கரண் மோர்வால். அது பலரது கவனத்தை ஈர்த்திருந்தது.
குல்தீப் சிங் செங்கர்:
உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த பாஜக முன்னாள் எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார். இவர் மீது கற்பழிப்பு, கொலை, கொலை முயற்சி, கிரிமினல் சதி மற்றும் கிரிமினல் மிரட்டல் ஆகிய வழக்குகள் நடந்து வந்தன. அதில் இவர்தான் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

இது தொடர்பான வழக்கு கடந்த ஜூன் 4, 2017 அன்று தொடங்கியது. அதில் 17 வயதான பெண் ஒருவர் செங்கரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இதனடிப்படையில் ஆகஸ்ட் 2019 இல் இவர் பாஜகவிலிருந்து நீக்கப்பட்டார்.
ஏப்ரல் 3, 2018 அன்று குல்தீப் சிங் செங்காரின் தந்தை சட்டவிரோத ஆயுத வழக்கில் கைது செய்யப்பட்டார். ஏப்ரல் 9, 2018 அன்று, இவர் நீதிமன்றக் காவலிலிருந்தபோது மரணத்தைத் தழுவினார்.
காயத்ரி பிரசாத் பிரஜாபதி
கடந்த 2017 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி ஆட்சியிலிருந்து. அப்போது சுரங்கத்துறை அமைச்சராக இருந்தார் காயத்ரி பிரசாத் பிரஜாபதி.
2017ஆம் ஆண்டு ஒரு பெண்ணை மூன்று ஆண்டுகளாகக் கூட்டுப் பலாத்காரம் செய்து வந்ததாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கை விசாரித்து வந்த அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2021இல் பிரஜாபதிக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. அதனடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். தற்போது பிரஜாபதி சிறையில் தனது தண்டனைக் காலத்தை அனுபவித்து வருகிறார்.
எம்.ஜே.அக்பர் :
உலகம் முழுவதும் மாபெரும் அதிர்வலையை உண்டாக்கியது மீ டூ இயக்கம். இந்தக் காலகட்டத்தில் பலர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்தன.
அப்போது முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது ஒரு பாலியல் புகார் எழுந்தது. ஆகவே அவர் அக்டோபர் 17, 2018 அன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
முன்னாள் பத்திரிகையாளரான அக்பர், மார்ச் 2014ல் பாஜகவில் சேர்ந்தார். அதற்கு முன், 1989 முதல் 1991 வரை பீகாரில் உள்ள கிஷன்கஞ்ச் தொகுதியில் காங்கிரஸ் எம்.பி.யாக பதவி வகுத்தார்.
அக்டோபர் 2018 இல் வோக் நாளிதழில் அக்பரின் பெயரைக் குறிப்பிடாமல் அவரைப் பற்றி ஒரு கட்டுரையில் எழுதியிருந்தார் பத்திரிகையாளர் பிரியா ரமணி. அதில் அக்பர் மீது முதன்முதலாகக் குற்றஞ்சாட்டினார்.
புருஷோத்தம் நரேஷ் திவேதி:
பகுஜன்சமாஜ் கட்சி தலைவர் புருஷோத்தம் நரேஷ் திவேதி, கடந்த டிசம்பர் 2010 இல் பண்டா மாவட்டத்திலுள்ள அவரது வீட்டில் ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இவர் 2007 முதல் 12 வரை உ.பி.யில் எம்.எல்.ஏவாக இருந்தார்.
அப்போதைய முதல்வர் மாயாவதி தலைமையிலான உத்தரப் பிரதேச அரசு, 2011ஆம் ஆண்டு திவேதிக்கு எதிராக எஃப்.ஐ.ஆரை பதிவு செய்ய உத்தரவிட்டது.
அவருக்கு எதிராக வழக்கு நடைபெற்று வந்தது. இறுதியாக 2011ல் இவருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதனடிப்படையில் பண்டா மாவட்டத்தில் உள்ள சிறையில் திவேதி அடைக்கப்பட்டார், ஆனால் பின்னர் 2015இல் ஜாமீன் பெற்று வெளியே வந்தார்.












Click it and Unblock the Notifications