சென்னையில்.. பராமரிப்பில்லாத பூங்காக்கள் மீண்டும் புத்துயிர்.. நேரடியாக களமிறங்கிய கே.என்.நேரு!
சென்னை: சென்னை, எண்ணூர், முட்டுக்காடு, கோவளம் உள்ளிட்ட 4 இடங்களில் சுமார் ரூ.2 ஆயிரத்து 500 கோடி மதிப்பீட்டில் 4 புதிய பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
சென்னை அடையாறு பகுதியில் அமைந்துள்ள தொல்காப்பியர் சுற்றுச்சூழல் பூங்காவில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என் நேரு ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

அதனை தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய கே.என் நேரு கூறியதாவது:- கடந்த தி.மு.க ஆட்சியில் ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, ரூ.69 கோடி செலவில் தொல்காப்பியர் பூங்கா உருவாக்கப்பட்டது. மீதமுள்ள நிதி பராமரிப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் இந்த பூங்கா பராமரிப்பு இல்லாத காரணத்தினால் பொதுமக்களுக்கு அனுமதி இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில் முதலமைச்சர் உத்தரவின் பெயரில் தொல்காப்பியர் பூங்கா 1 மாத காலத்திற்குள் பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு விடப்படும். இதேபோல் பக்கிங்ஹம் கால்வாய், எண்ணூர், முட்டுக்காடு, கோவளம் ஆகிய பகுதிகளில் சுமார் ரூ.2 ஆயிரத்து 500 கோடி மதிப்பீட்டில் 4 புதிய பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை மாநகராட்சியில் பராமரிப்பு இல்லாத பூங்காக்கள் ஆய்வு செய்யப்பட்டு, மறுசீரமைப்பு செய்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடப்படும் என்று அமைச்சர் கே.என் நேரு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications