இன்று நீட் தேர்வு நடக்கும் நிலையில்.. நாளை நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம்
சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் நாளை தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு 'நீட்' என்னும் நுழைவு தேர்வை ஆண்டுதோறும் மத்திய அரசு நடத்தி வருகிறது. மத்திய அரசு நடத்தி வருகிறது.
தேசியத் தேர்வுகள் முகமை சார்பில் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு மே முதல் வாரத்தில் நடைபெறவிருந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெறுகிறது. நாடு முழுவதும் 202 தேர்வு மையங்களில் 12-ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை பேனா, காகித முறையில் நீட் தேர்வு நடைபெறுகிறது.

தமிழக அரசு எதிர்ப்பு
தமிழ்நாட்டை பொறுத்தவரை 'நீட்' தேர்வுக்கு தொடர்ந்து எதிர்த்து தெரிவித்து வருகிறது. தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்தது முதல் நீட் தேர்வு ரத்து செய்வது தொடர்பாக பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. டெல்லி சென்ற தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியிடம் நேரில் வலியுறுத்தினார். இதேபோல் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் நேரில் வலியுறுத்தினார்.

ஆய்வு செய்த குழு
மேலும், தமிழ்நாட்டில் நீட் தேர்வின் தாக்கம் குறித்த பாதிப்புகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் குழு ஒன்றை அமைத்தார் மு.க. ஸ்டாலின். இதனை தொடர்ந்து இது தொடர்பாக ஆய்வு செய்த ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு முதல்வரிடம் தங்களது ஆய்வு அறிக்கையை சமர்பித்தது.

மாணவர்கள் விரும்பவில்லை
மருத்துவப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு நீட் தேர்வு தேவையில்லை எனவும், மாநில அரசின் 85 விழுக்காட்டு இடங்களுக்கு 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சேர்த்துக் கொள்ளலாம் என்றும் தேவைப்பட்டால் மாநில அரசே நீட் தேர்வு நடத்தி கொள்ளலாம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. இதன் மூலம் தமிழ்நாடு மாணவர்கள் நீட் தேர்வை விரும்பவில்லை என்பது தெரியவந்தது.

நீட்டுக்கு எதிராக தீர்மானம்
தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வு எழுத மிக குறைந்த மாணவர்களே விண்ணப்பித்துள்ளனர் என்று தமிழ்நாடு கல்வித்துறை ஏற்கனவே தகவல் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் திங்கட்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தெரிவித்துள்ளார். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வலியுறுத்தி தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

எழும் விமர்சனம்
தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தி.மு.க தேர்தல் அறிக்கையில் கூறி இருந்தது. ஆனால் இந்த வாக்குறுதியை ஏன் நிறைவேற்றவில்லை? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இன்று நாடு முழுவதும் நீட் தேர்வு நடக்க உள்ள நிலையில் நாளையே நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது பல்வேறு விமர்சனங்களை எழுப்பி இருக்கிறது.












Click it and Unblock the Notifications