"நல்ல சான்ஸ்.. உதயநிதியை அமைச்சராக்குங்கள்.." ஓப்பனாக சொன்ன மா.சு.! சைலெண்ட் மோடில் உதயநிதி
சென்னை: தமிழ்நாடு அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று பலரும் கூறி வரும் நிலையில், அமைச்சர் மா. சுப்பிரமணியன் இது தொடர்பாக சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டசபை உறுப்பினரும் திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாள் நேற்றைய தினம் கொண்டாடப்பட்டது.
திமுகவினர் சார்பில் பல்வேறு இடங்களிலும் உதயநிதி ல்டாலினுக்கு வாழ்த்துக் கூறி போஸ்டர்கள், பேனர்கள் வைக்கப்பட்டது. மேலும், சமூக வலைத்தளங்களிலும் திமுகவினர் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
உதயநிதி ஸ்டாலின் சீரிய கொள்கை வீரர், பகுத்தறிவாளர்... பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்திய கி.வீரமணி
உதயநிதி
அதேபோல திமுக சார்பில் பல்வேறு நலத்திட்டப் பணிகளும் நடத்தப்பட்டன. குறிப்பாக மாநிலத்தில் பல்வேறு இடங்களில் மெகா மருத்துவ முகாம்களும் நடைபெற்றன. இன்றும் கூட தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. சென்னையிலும் பல்வேறு நலத்திட்டங்கள் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன.
தங்க மோதிரம்
சென்னையை அடுத்த மேடவாக்கம் அரசு மருத்துவமனையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளான நேற்று பிறந்த 13 குழந்தைகளுக்குப் புனித தோமையர்மலை தெற்கு ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் ஜெ.எழில்பாண்டியன் ஏற்பாட்டில் தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் 13 குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் அணிவித்தார்.
எழுச்சி
மேலும், அந்த குழந்தைகளுக்கு பேபி கிட், ஆடைகள் மற்றும் பழவகைகளையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த்ரமேஷ், ஒன்றிய கழக செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் இருந்தனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், "உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞரணி செயலாளராகப் பொறுப்பேற்ற பிறகு, நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளார். இதன் மூலம் இளைஞர் அணியில் ஒரு எழுச்சிமிகு தலைவராக உதயநிதி உருவெடுத்துள்ளார்.
தமிழகத்திற்கு நல்ல வாய்ப்பு
அதேபோல சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்ற பின்பு உதயநிதி ஸ்டாலின், இப்போது சேப்பாக்கம் திருவல்லிக்கேனி தொகுதியில் செல்லாத வீடே இல்லை என்று சொல்லலாம். அந்தளவுக்கு வீடு தோறும் தேடி சென்று உதயநிதி உதவி செய்து வருகிறார். இப்படிப்பட்ட சிறப்புகளைப் பெற்ற அவர் அமைச்சராவது தமிழகத்திற்குக் கிடைத்த நல்ல வாய்ப்பாக நாங்கள் கருதுகிறோம்.. உங்களைப் போலவே நாங்களும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். உதயநிதி விரைவில் அமைச்சர் ஆவார் என்று நம்புகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.
சீனியர் அமைச்சர்கள்
உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்று அமைச்சர்கள் கோரிக்கை விடுப்பது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பல அமைச்சர்கள் இதேபோல வெளிப்படையாகவே உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அப்போதே செயல்படாத சில அமைச்சர்களை நீக்கிவிட்டு அமைச்சரவையில் மாற்றம் வரலாம் எனக் கூறப்பட்டது. குறிப்பாக, சில மூத்த அமைச்சர்களுக்குப் பதிலாக இளம் அமைச்சர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்டது. இருப்பினும், அப்போது அமைச்சரவையில் எந்தவொரு மாற்றமும் நடக்கவில்லை.
உதயநிதி
இதற்கிடையே உதயநிதி பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், இப்போது மீண்டும் அதே பேச்சு எழுந்துள்ளது. அமைச்சர்கள் கே. என் நேரு, மா சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் ஆகியோரும் இந்த விருப்பத்தைத் தெரிவித்து உள்ளனர். எம்எல்ஏவாகவே சிறப்பாகச் செயல்படும் உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இருப்பினும், உதயநிதியோ இந்த விஷயத்தில் முதல்வரே தக்க நேரத்தில் முடிவெடுப்பார் எனச் சொல்லிவிட்டு சைலெண்ட் மோடில் உள்ளார்.