அதிமுக பிரிந்த கூடை.. திரிந்த பால்.. டீ, காபிகூட போட முடியாது! அமைச்சர் மனோ தங்கராஜின் கலாய் கவிதை
சென்னை: அதிமுகவில் இபிஎஸ் - ஓபிஎஸ் இடையே தலைமைக்கான போட்டி தொடர்ந்து வரும் நிலையில், அதிமுக வலுவான கட்சி என்பது அறியாமை என்றும், அது ஒற்றுமையாகவும் ஒரே கட்சியாகவுமில்லை எனவும் அமைச்சர் மனோ தங்கராஜ் ட்விட்டரில் விமர்சித்து உள்ளார். அதே நேரம் திமுக கொள்கை ரீதியாகக் கட்டமைக்கப்பட்டு வலுவான கூட்டணியுடன் இருக்கும் கட்சி என அவர் புகழ்ந்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி, ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் இடையே அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி யாருக்கு என்ற போட்டி கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பு நடத்திய பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி அது செல்லாது என உத்தரவிட்டார்.

எடப்பாடி மேல் முறையீடு
தனி நீதிபதி பிறப்பித்த நீதிமன்ற உத்தரவால் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பதவியை இழந்தார். தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற இருவர் அமர்வு தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டது.

மீண்டும் அதிமுக பொதுச்செயலாளர்
எடப்பாடி பழனிசாமிக்கு இந்த தீர்ப்பால் மீண்டும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பதவி கிடைத்தது. இதனை அடுத்து அதிமுகவில் விரைவில் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி முழுமையாக அந்த பதவியை தக்க வைத்துக் கொள்ள என எடப்பாடி பழனிசாமி வேகமாக காய்களை நகர்த்தி வருகிறார்.

உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் வழக்கு
ஆனால், ஓ.பன்னீர்செல்வம் விடுவதாக இல்லை. உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த இடைக்கால தடை விதித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸின் மேல்முறையீட்டு மனுவை ரத்து செய்யக்கோரி பதில் மனுவை தாக்கல் செய்தார்.

உச்சநீதிமன்றத்தில் விசாரணை
இந்த வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் சாய் அமர்வு முன் தீவிரமாக விசாரிக்கப்பட்டு இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. அதிமுக பொதுக்குழு வழக்கை ஒரு வாரத்திற்குள் விசாரித்து முடிக்க இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். அடுத்த 2 நாட்களில் விசாரணை முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எடப்பாடி தரப்பு விளக்கம்
நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையில், எடப்பாடி பழனிசாமி தரப்பு இதனை அவசரமாக விசாரிக்க விரும்புவது ஏன் என்று கேட்டனர். அப்போது, அவர் தரப்பு வழக்கறிஞர், "நீதிமன்ற விசாரணையால் கட்சிப் பணிகள் தேக்கமடைந்து இருக்கின்றன. இதனால் விரைந்து வழக்கை விசாரிக்க வேண்டும். திமுகவுக்கு ஆதரவாக ஓ பன்னீர்செல்வம் செயல்படுகிறார்." என்று தெரிவிக்கப்பட்டது.

ஓபிஎஸ் தரப்பு விளக்கம்
மறுபக்கம் ஓ.பி.எஸ். தரப்போ, அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகாலம் 2026 வரை உள்ளதாக தெரிவித்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், "இந்த வாரமே அதிமுக பொதுக்குழு வழக்கை நிறைவு செய்வதே தங்களின் விருப்பம்" என்று கூறி இன்று வழக்கை ஒத்து வைத்தார்கள். தற்போது வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

அமைச்சர் மனோ தங்கராஜ்
இந்த நிலையில்தான், தமிழ்நாடு அமைச்சர் மனோ தங்கராஜ் ட்விட்டரில் அதிமுகவை விமர்சித்து ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதில், "அதிமுக வலுவான கட்சி என்பது அறியாமை. அது ஒற்றுமையாகவும் இல்லை ஒரே கட்சியாகவும் இல்லை. அது ஒரு பிரிந்து போன கூடை. அதில் எந்த பழத்தையும் வைத்து பாதுகாக்க முடியாது. அது திரிந்துபோன பால். காபியோ டீயோ போட முடியாது. திமுக கொள்கை ரீதியாக கட்டமைக்கப்பட்டு வலுவான கூட்டணியுடன் இருக்கும் கட்சி." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications