தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை குறைப்பு?.. முக்கிய தகவல் சொன்ன அமைச்சர் செந்தில் பாலாஜி!
சென்னை: பள்ளிகள், கோவில்களுக்கு அருகில் டாஸ்மாக் கடைகள் செயல்படுவது தெரியவந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 4-வது நாளாக அதிகரிக்கும் கொரோனா.. இந்த 3 மாவட்டங்களில் பாதிப்பு அதிவேகம்.. என்ன காரணம்?
சென்னை எழும்பூரில் உள்ள சி.எம்.டி.ஏ வளாகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி டாஸ்மாக் மாவட்ட மற்றும் மண்டல மேலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
கடும் நடவடிக்கை
இதனை தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது:- தமிழகத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தினை தவிர கூடுதல் நேரத்தில் மதுக்கடைகள் திறந்து வைக்க கூடாது. கூடுதல் விலைக்கு மது விற்றால் அவர்கள் மீது துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று ஏற்கனவே கூறி இருக்கிறோம்.
விலை பட்டியல்
எந்த மதுக்கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்றாலும் அதற்கு அந்த மாவட்ட மேற்பாளர் தான் பொறுப்பு என்று கூறி இருக்கிறோம். அனைத்து மதுக்கடைகளுக்கும் முன்னால் விலை பட்டியல் வைக்கப்படும். விலைபட்டியலுக்கு மேலாக கூடுதல் விலைக்கு மது விற்கப்பட்டால் சம்பந்தப்பட்ட கடையின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
முதல்வர் முடிவெடுப்பார்
நம்மை பொறுத்தவரை மதுக்கடைகள் மூலம் வருவாய் வருவது முதன்மையான நோக்கம் அல்ல. அரசுக்கு நல்ல பெயர் உருவாக்க வேண்டும் என்பதே நோக்கம். மதுக்கடைகள் எண்ணிக்கை குறைக்கப்படுமா? என்று கேட்கிறீர்கள். மதுக்கடைகள் குறைப்பது என்பது கொள்கை ரீதியான முடிவு. வரக்கூடிய காலங்களில் டாஸ்மாக் நிர்வாகத்தினை எப்படி செயல்படுத்துவது? என்று முதல்வர் ஸ்டாலின் எங்களுக்கு கூறுவார்.
குறைபாடுகள் என்னென்ன?
வரக்கூடிய காலங்களில் டாஸ்மாக் துறையில் என்னென்ன குறைபாடுகள் உள்ளதோ, அதனை இனி வரக்கூடிய ஆய்வு கூட்டங்களில் ஆலோசிப்போம். விதி முறைகளுக்கு மாறாக பள்ளிகள், கோவிலுக்கு அருகில் மது கடைகள் செயல்படுவதை எங்கள் கவனத்திற்கு கொண்டுவந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
மக்கள் கோரிக்கை
தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் மிக அதிகமாக இருக்கின்றன. அதிமுக ஆட்சியில் டாஸ்மாக் கடைகள் எண்ணிக்கை சிறிது குறைக்கப்பட்டாலும்., அதன்பிறகு கடைகள் பல்கி பெருகி விட்டன. தமிழகத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மது கலாசாரம் பெருகி விட்டதால், குற்றச்செயல்கள் அதிகரிப்பதற்கு மதுவும் ஒரு காரணமாக இருக்கிறது. எனவே அரசு கூடிய விரைவில் டாஸ்மாக் கடைகளை குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.