சூப்பர்.. கொரோனா நோயாளிகளுக்கு உணவு வழங்க.. மருத்துவமனைகளில் தலா 10 பேர் நியமனம்.. மா.சு அறிவிப்பு!
சென்னை: கொரோனா வார்டில் உள்ள நோயாளிகளுக்கு உணவு கொடுக்க ஒவ்வொரு மருத்துவமனையிலும் 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
Recommended Video
சென்னை வேளச்சேரியில் கோவிட் கேர் மையத்தில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
அங்கு நோயாளிகளுக்கு வழங்குவதற்காக சமைக்கப்படும் உணவு கூடத்தை அவர் பார்வையிட்டார். அந்த உணவை சாப்பிட்டு பார்த்து தரத்தை பரிசோதித்தார். அப்போது தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி
பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:- தமிழகத்தில் முழு ஊரடங்கால் நல்ல பலன் கிடைத்துள்ளது. கடந்த15 நாட்களில் கொரோனா தொற்று பாதிப்பு பாதியாக குறைந்துள்ளது. ஆனால் 9 மாவட்டங்களில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இருந்தபோதிலும் கொரோனாவுக்கு முழுமையாக விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
முன்னாள் கமிஷனருக்கு பாராட்டு
கடந்த 31 நாட்களாக 6 முக்கிய மருத்துவமனைகளை சார்ந்த 3000 மருத்துவர்,செவிலியர் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு தரமான உணவு தயாரித்து வழங்கப்படுகிறது. இடையறாது இப்பணியை செய்யும் முன்னாள் காவல்துறையின் ஆணையர் திரு.ஏ.கே.விஸ்வநாதன் தலைமையிலான 50 போலீசாருக்கும் பாராட்டுக்கள் தெரிவித்து கொள்கிறேன்.
கருப்பு பூஞ்சை தடுப்பு மருந்து
கொரோனா வார்டில் உள்ள நோயாளிகளுக்கு உணவு கொடுக்க ஒவ்வொரு மருத்துவமனையிலும் 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் . ஒருபக்கம் கருப்பு பூஞ்சை நோய்க்கும் அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது மத்திய அரசிடம் 35,000 குப்பி கருப்பு பூஞ்சை தடுப்பு மருந்து கேட்டுள்ளோம். ஆனால் 3,060 மருந்து குப்பிகள் மட்டுமே கிடைத்துள்ளது.
கள்ளச் சாராய விற்பனை தடுப்பு
தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையின்போது கடைகள் மூடப்பட்டு இருந்தாலும் டாஸ்மாக் கடைகள் திறந்திருந்தன. ஆனால் இப்போது அப்படியில்லை. கடைகள் தொழிற்சாலைகள் மூடப்பட்டது போல் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. கள்ளச் சாராய விற்பனையை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
வெளியே சுற்றக் கூடாது
மருத்துவ நியமனங்களில் எந்த முறைகேடும் நடக்காது என்று உறுதி அளிக்கிறேன். மருத்துவர்களின் பணி நியமனம் மற்றும் பணியிட மாறுதல் எந்த சந்தேகத்துக்கும் இடமின்றி வெளிப்படையாக நடைபெறும். எனவே இதில் எந்த முறைகேடு நடக்கவும் வாய்ப்பில்லை. தற்போது ஊரடங்கு தளர்வுகள் கொடுத்தாலும் பொதுமக்கள் அதனை முறையாக மட்டுமே பயன்படுத்த வேண்டும். தேவையின்றி வெளியே சுற்றக் கூடாது என்று மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.