அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்குகளில் தீவிர விசாரணை: ஹைகோர்ட்டில் தமிழக போலீஸ்
சென்னை: அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக பதியப்பட்ட மூன்று வழக்குகளிலும் விரிவான விசாரணை நடத்த உள்ளதாக தமிழக காவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தற்போதைய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2011-15ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது, அரசு போக்குவரத் துறையில் வேலை வாங்கி தருவதாக 81 பேரிடம் பணம் பெற்று மோசடி செய்தார் செந்தில் பாலாஜி என கணேஷ்குமார், தேவசகாயம் முதலில் புகார் கொடுத்தனர்.
“எனக்கு போன் பண்ணுங்க”.. 24 மணி நேரமும் வேலை செய்ய ஆர்டர்.. அமைச்சர் செந்தில் பாலாஜி சொன்ன தகவல்!
செந்தில் பாலாஜி வழக்கு
இதனடிப்படையில் செந்தில் பாலாஜி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இவ்வழக்கில் 2017-ம் ஆண்டு செந்தில் பாலாஜி ஜாமீன் பெற்றார். இவ்வழக்கில் செந்தில் பாலாஜியின் வீடு உள்ளிட்ட இடங்களும் சோதனைக்குள்ளாக்கப்பட்டன. இதேபோல் செந்தில் பாலாஜி பல கோடி ரூபாய் மோசடி புகார்கள் கொடுக்கப்பட்டன. செந்தில்பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், தேவசகாயம், அன்னராஜ் உள்ளிட்டோர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் மூன்று வழக்குகளை பதிவு செய்தனர். இவ்வழக்கு எம்.பி, எம்.எல்.ஏக்களை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
வழக்கு ரத்தும் எதிர்விளைவுகளும்
சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது 2020-ம் ஆண்டு தம்மை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஒருகட்டத்தில் தம் மீது புகார் கொடுத்தவர்களுடன் சமாதானமடைந்துவிட்டதாக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பு தெரிவித்தது. இதனடிப்படையில் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கு ரத்து செய்யப்பட்டது. இது செந்தில் பாலாஜி தரப்புக்கு நிம்மதியைக் கொடுத்தது.
உச்சநீதிமன்றம் ரத்து
அதேநேரத்தில் பண மோசடி வழக்கு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சேலம் தர்மராஜ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். இதில் செந்ந்தில் பாலாஜி தரப்பும் கேவியட் மனுவைத் தாக்கல் செய்தது. இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், செந்தில் பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்த சென்னை நீதிமன்றத்தின் உத்தரவை அதிரடியாக ரத்து செய்துவிட்டது.
தீவிர விசாரணை
இந்நிலையில் தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி அமைச்சர் செந்தில்பாலாஜி தாக்கல் செய்த வழக்கு, நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்குகளில் மீண்டும் நடத்த தமிழக அரசிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், மூன்று வழக்குகளிலும் விரிவான விசாரணை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்குகளை இறுதி விசாரணைக்காக செப்டம்பர் 29ம் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி இளந்திரையன்.