கல்வி கட்டணம் எவ்வளவு.. 'டிசி', ஆன்லைன் கிளாஸ், தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு '6' அறிவுறுத்தல்
சென்னை: இந்த ஆண்டு தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தில் 75 சதவீதம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும் கல்வி கட்டணம் செலுத்த மாணவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது என்று தனியார் பள்ளிகளுக்கு பள்ளி கல்விதுறை எச்சரிக்கை விடுத்துள்ளது, கட்டணம் செலுத்தாத மாணவர்களை இணையதள வகுப்பில் இருந்து நீக்கக் கூடாது.என்றும் அறிவுறுத்தி உள்ளது.
கொரோனா முதல் அலையால் கடந்த ஆண்டு மூடப்பட்ட பள்ளிகள், இரண்டாவது அலையால் இந்த ஆண்டும் இதுவரை திறக்கப்படவில்லை. ஆன்லைனில் வகுப்புகள் தொடங்கி உள்ளன.
தனியார் பள்ளிகள் கல்வி கட்டணம் எவ்வளவு வசூலிக்க வேண்டும், எப்படி மாணவர்களிடம் நடந்து கொள்ள வேணடும், மாற்று சான்றிதழ் விவகாரம் உள்ளிட்டவை குறித்து தமிழக அரசு நேற்று மாலை அறிவிக்கை வெளியிட்டது.
உத்தரவுகளை மதிக்கணும்.. இல்லாட்டி.. தனியார் பள்ளிகளை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய தமிழ்நாடு அரசு!
சுற்றறிக்கை
பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாநிலம் முழுவதும் உள்ள சிபிஎஸ்இ உட்பட அனைத்துவித தனியார் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
அங்கீகாரம்
அங்கீகாரம் புதுப்பிக்காத பள்ளிகள் உடனடியாக அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மாணவர் சேர்க்கை மற்றும் மாற்றுச் சான்றிதழ் வழங்கும் பணிகளில் கல்வித் துறையின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
ஆன்லை வகுப்பு
இதுதவிர உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி இந்த ஆண்டு தனியார் பள்ளிகள் 75 சதவீதம் மட்டுமே கல்விக்கட்டணத்தை வசூலிக்க வேண்டும். சீருடை, பேருந்து உட்பட இதரகட்டணங்களை செலுத்த கட்டாயப்படுத்தக் கூடாது. கட்டணம் செலுத்தாத மாணவர்களை இணையதள வகுப்பில் இருந்து நீக்கக் கூடாது.
புகார்கள் வரக்கூடாது
அதேபோல், மாணவர் சேர்க்கை விவரங்களை பள்ளிக்கல்வி தகவல் மேலாண்மை தளத்தில் (எமிஸ்) பதிவேற்றம் செய்ய வேண்டும். இதுதொடர்பாக மாணவர்கள், பெற்றோர்களிடம் இருந்து எவ்வித புகார்களும் வராதவண்ணம் பள்ளிகள் செயல்பட வேண்டும். மீறினால் துறை சார்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்" இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.