மதுரையில் 104 டிகிரி,சென்னையில் 100 டிகிரி வெப்பநிலை - சுட்டெரிக்கும் சூரியனால் அவதியில் மக்கள்
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரஹீட்டை தொட்டுள்ளது. சுட்டெரிக்கும் சூரியனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
சென்னை: தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. மதுரையில் அதிகபட்சமாக 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும், சென்னையில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும் பதிவாகி வருகிறது.
தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரியை தொட்டுள்ளது. அக்னி நட்சத்திர காலம் இப்போதே ஆரம்பித்து விட்டது போல அனலடிக்க ஆரம்பித்து விட்டது.
இந்நிலையில், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளதால் மக்களின் கவலை அதிகரித்துள்ளது.

வெப்பநிலை அதிகரிப்பு
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரித்தே காணப்பட்டது. 23.03.2022 முதல் 25.03.2022 வரை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலையானது இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

பகல்நேர வெப்பநிலை
சென்னையில் மார்ச் மாதத்தின் பகல் நேர வெப்பநிலை சராசரியாக 32.9 டிகிரி ஆகும். ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் செவ்வாய்கிழமை அதிக வெப்பம் கொண்ட நாளாக பதிவாகியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கம் ஆகிய வானிலை நிலையங்களில் பகல்நேர வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் ஆக அதாவது 100 டிகிரி ஃபாரஹீட் அளவிற்கு பதிவாகியுள்ளது.

மதுரையில் 104 டிகிரிஃபாரன்ஹீட் வெப்பநிலை
கடந்த 10 ஆண்டுகளில் மார்ச் மாதத்தில் இது போல இரண்டுமுறை மட்டுமே பதிவாகியுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி 38.3 டிகிரி வெயில் பதிவானது. இந்நிலையில், மதுரை விமானநிலையத்தில் 40.2 டிகிரி செல்சியல் வெப்பநிலை அதாவது 104 ஃபாரஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

மழையால் குளிர்ச்சி
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் சில ஊர்களில் மழை பெய்துள்ளது. கரூர், தாந்தோன்றிமலை, வெங்கமேடு, பசுபதிபாளையம், சுங்ககேட் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் நேற்று வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அதிக வெயிலின் காரணமாக விவசாயிகள் பயிரிட்டிருந்த பணப்பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டது. இந்த மழையால் பயிர்கள் துளிர்விடும் நிலை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications