அரபிக் கடல்ல ஒருத்தன்.. அந்தமான் கடல்ல புதுசா இன்னொருத்தன்.. எல்லாமே பர்ஃபெக்ட்!.. வெதர்மேன்
சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை நாளை வரை தொடரும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை கொட்டி வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. சென்னை உள்பட 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
ஏற்கெனவே சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி தருகிறது. இந்த நிலையில் 3 மணி நேரம் மழை என்பதால் மேலும் வெள்ள நீர் சூழும் அபாயம் உள்ளது.

4 மாவட்டங்கள்
இந்த நிலையில் நாளை காலை வரை சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழை பெய்யும் என சொல்லப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்ட பதிவில் பர்ஃபெக்ட்டான வளி மண்டல மேலடுக்கு சுழற்சி இதுவாகும். அரபிக் கடலில் ஏற்கெனவே ஒரு குறைந்த காற்றழுத்தம் நிலவுகிறது.

புதிய காற்றழுத்த தாழ்வு நிலை
அந்தமான் கடலில் அடுத்த வாரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்படுகிறது. இந்த இரண்டுக்கும் நடுவே வளி மண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. மேலும் வெப்பச்சலனமும் பக்காவாக உருவாகியுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் அது மேகக் கூட்டங்களை உருவாக்கும். இதனால் கடலோர வெப்பச்சலனத்தை ஏற்படுத்தும்.

திருவள்ளூர்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்றிரவு முதல் நாளை காலை வரை கனமழை பெய்யும். தமிழகத்தில் மற்ற கடலோர மாவட்டங்களிலும் இன்றிரவு கனமழை பெய்யும் என வெதர்மேன் தெரிவித்துள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் சென்னையில் பெய்த மழையிலேயே நேற்று இரவு முதல் பெய்த மழைதான் மிக கனமழை என்றும் வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

அவசர எண்
வெள்ளப் பாதிப்புகள், மழை குறித்து தகவலளிக்க சென்னை மாநகராட்சியின் 1913 எண் அல்லது 04425619206/04425619207/04425619208 என்ற எண்களை மக்கள் தொடர்பு கொள்ளலாம் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ரேடார் செயல்பட வில்லை என்பதால் மழையை துல்லியமாக கணிக்க முடியவில்லை என தகவல்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications