புள்ளி விவரங்களால் வாயை அடைக்க முடியாது.. பிரச்சினைகளில் கவனம் செலுத்துங்கள்.. ஜெயக்குமார் ஆவேசம்!
சென்னை: மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதில் அரசு கவனம் செலுத்தினால் தமிழகம் மகிழ்ச்சி அடையும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
Recommended Video
தமிழ்நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து தமிழக அரசின் நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். இதற்கு தமிழக அரசு சார்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்தார்.

மா.சுப்பிரமணியன் பதிலடி
அதில், கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில், குறிப்பாக கடைசி நான்கு ஆண்டுகளில், அதன் நிர்வாகத் திறனற்ற தன்மை ஊரறிந்த ஒன்று. ஆட்சியைக் காப்பாற்றவா? கட்சியைக் காப்பாற்றவா? பதவியைக் காப்பாற்றவா? என்று ஓடித் திரியவே காலங்கள் ஓடியதால், கால்கள் தவழ்ந்ததால், முதுகு வளைந்ததால் இவ்வாறான ஆலோசனைகளை மேற்கொள்ள கால நேரம் கிடைக்கவில்லையோ, என்னவோ?
மனக்குழப்பம் நீங்கினால்தானே தெளிவான முடிவு எடுக்க முடியும். நீங்கள் குட்டையை குழப்பி அல்லவா மீன் பிடித்தீர்கள். பிறகு எங்கே தீர்க்கமான முடிவு எடுக்க நேரம்? அதிமுகவின் அலங்கோலமான ஆட்சிக் காலத்தின் சாட்சிகளில் ஒன்றாக நிலைத்து இருப்பதுதான் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் அபரிமிதமான வளர்ச்சி. ஊளையிடுவதால் உண்மையை மறைக்க முடியாது என்று பதிலடி கொடுத்தார்.

ஜெயக்குமார் பதில்
இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மக்களின் உயிரை காக்கும் மக்கள் நல்வாழ்வுத் துறையை கடந்த 14 மாத காலமாக தன்னுடைய நிர்வாகத்தால் கோமா நிலைக்கு கொண்டு சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பற்றி அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். மக்கள் நல பிரச்சினைகளை தீர்க்க முடியாமல் கையை பிசைந்து கொண்டு இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விட, சுமார் நான்கரை ஆண்டுகள் நல்லாட்சி நடத்தியவர் என்பதால் அரசுக்கு வழிகாட்டுகிறார்.

அதிமுக ஆட்சியில் அமைதி தவழும்
இதுவே எதிர்கட்சியின் ஜனநாயக கடமை. திமுக ஆட்சி மக்களின் நல்வாழ்வுக்கு, அமைதிக்கு கொள்ளி வைத்துவிட்டு, வெறும் புள்ளி விவரங்களால் பதில் சொல்லி வாயை அடைத்துவிடலாம் என்று தப்புக்கணக்கு போடுகிறார்கள். அதிமுக ஆட்சி என்றால், மக்களுக்கு இன்னல்கள் இன்றி, சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் அடங்கி, அமைதி தவழும். திமுக ஆட்சியில் ரவுடியிசம் மட்டுமே நிலைக்கும் என்பது கட்சி வேறுபாடின்றி பொது மக்கள் அனைவரும் ஒப்புக்கொள்ளும் உண்மை. மீதியிருக்கின்ற ஆண்டுகளாவது சட்டத்தின் ஆட்சி நடத்த மு.க.ஸ்டாலின் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

தமிழக அரசுக்கு அறிவுரை
நிர்வாகத் திறனற்ற திமுக அரசும், அதன் அமைச்சர்களும், எதிர்கட்சிகளுக்கு எதிராக நீண்ட அறிக்கையை கொடுப்பதற்கு பதில், மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்தினால் தமிழகம் மகிழ்ச்சி அடையும். தமது திறமையின்மையை மறைக்க எதிர்க்கட்சிகளை குறை சொல்லும் அரசு திருந்த ஒரு வாய்ப்பு அளித்த மக்களை மீண்டும் வேதனையில் தள்ள வேண்டாம். எஞ்சி இருக்கும் காலத்தையாவது மக்களுக்கான ஆட்சியாக நடத்துவதே, இவர்கள் மக்களுக்கு செய்யும் உதவியாகும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications