அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுக... தமிழக காங்கிரஸ் கமிட்டி வலியுறுத்தல்
சென்னை: பரம்பிக்குளம்-ஆழியார் நீர் பங்கீடு பிரச்சனையில் முதலமைச்சர் தனித்து செயல்படாமல் உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
பரம்பிக்குளம்-ஆழியார் திட்டம் என்பது இரு மாநில சம்மந்தப்பட்டது என்றும், அதில் முடிவெடுப்பதற்கு முன்பு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி முதலமைச்சர் ஆலோசனை பெற்றிருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். ஆழியார்-பரம்பிக்குளம் பிரச்சனைக்கு தீர்வு காண 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டதில் வெளிப்படைத்தன்மை இல்லை என குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுபோன்ற ஜீவாதாரமான பிரச்சனைகளில் அரசியல் கட்சிகளும, விவசாய சங்கங்கள், அந்த திட்டத்திற்காக போராடியவர்கள் என பல தரப்பையும் அழைத்துப் பேசியிருக்க வேண்டும் எனவும், ஆனால் தமிழக அரசு அதுபோல் செய்யாதது ஏமாற்றம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பரம்பிக்குளம்-ஆழியார் நீர் பங்கீடு பிரச்சனையில் யாரையும் ஆலோசிக்காமல் எல்லோரையும் புறக்கணித்துவிட்டு தன்னிசையாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்படுவது , தமிழகத்தின் உரிமைகள் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார். இதனால் தாமதிக்காமல், அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி இந்த விவகாரம் குறித்து முதல்வர் விவாதித்து முடிவெடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
பரம்பிக்குளம்-ஆழியார் திட்டம் மூலம் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் சுமார் இரண்டரை லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பயபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.