இன்னும் இரண்டரை ஆண்டுகாலம்! 2024 தேர்தல் கூட்டணிக்கு அச்சாரமிட்டு காங்கிரஸ் புத்தாண்டு வாழ்த்து!
சென்னை: மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகள் ஓரணியில் திரண்டு 2024 பொதுத் தேர்தலில் ஒன்றிய பா.ஜ.க. அரசை அகற்றுவதற்கு வருகிற புத்தாண்டு தொடக்கமாக அமையட்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
பொதுத்தேர்தலுக்கு இன்னும் இரண்டரை ஆண்டுகாலம் உள்ள நிலையில் இப்போதே அதற்கான கூட்டணிக்கு அடித்தளமிட முயற்சித்திருக்கிறார்.
இது தொடர்பாக கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள ஆங்கில புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில்;
200 வருடங்களில் சூப்பர் ரெக்கார்ட்.. சென்னை தொட்ட இன்னொரு மைல்கல்.. வெதர்மேன் தந்த செம டேட்டா!
மக்கள் இன்னல்
கடந்த சில ஆண்டுகளாக இந்திய மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வந்தனர். கொரோனா பரவல் காரணமாக பாதிப்புகளும், மனித உயிரிழப்புகளும் மிகுந்த வேதனைகளை உண்டாக்கியது. இதனால் மக்களிடையே அச்சமும், பீதியும் பெருகியது. இதிலிருந்து மக்களை காப்பாற்றுவதற்கு சரியான அணுகுமுறையை பா.ஜ.க. அரசும், அன்றைய தமிழக அரசும் கையாளவில்லை. இதைத் தொடர்ந்து பொருளாதாரப் பின்னடைவுகளும் மக்களின் வாழ்வாதாரத்தை மிகவும் பாதித்துள்ளது.
பெரும் பொறுப்பு
இதிலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டிய பெரும் பொறுப்பு தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது. ஆட்சி பொறுப்பேற்றது முதற்கொண்டு, கடந்த ஆறு மாதங்களாக கொரோனா பரவலை தடுப்பதில் தமிழக அரசு பெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. நடப்பு புத்தாண்டில் தமிழகத்தில் புதிய ஆட்சி மலர்ந்து மக்கள் அரசின் நலன்சார்ந்த திட்டங்களினால் பெரும் பயனை அடைந்து வருகிறார்கள். எந்த சேதாரமும் இல்லாமல் மக்கள் நலத் திட்டங்கள் பயனாளிகளுக்கு முழுமையாக சென்றடைகின்றன.
பாஜக அரசு
இதனால், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தின் காரணமாக வளர்ச்சிப் பாதையை நோக்கி பயணிக்கிற வாய்ப்பு உருவாகியிருக்கிறது. அதேநேரத்தில், ஒன்றிய பா.ஜ.க. அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை காரணமாக தமிழகம் பல நிலைகளிலும் வஞ்சிக்கப்பட்டு வருகிறது. வெள்ள நிவாரண ஒதுக்கீட்டில் புறக்கணிப்பு, இந்தி, சமஸ்கிருத திணிப்பு, கூட்டாட்சித் தத்துவத்திற்கு உலை வைக்கிற நடவடிக்கைகள், நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் தராத போக்கு என மாநில நலன்களுக்கு எதிராக ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது.
2024 தேர்தல்
இத்தகைய அவலநிலைகளிலிருந்து தமிழகத்தை காப்பாற்றுகிற பொறுப்பும், கடமையும் எண்ணற்ற வெற்றிகளை குவித்து வருகிற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு இருக்கிறது. அதனை நிறைவேற்றுகிற வகையில் ஒருங்கிணைந்து ஓரணியில் திரண்டு 2024 பொதுத் தேர்தலில் ஒன்றிய பா.ஜ.க. அரசை அகற்றுவதற்கு வருகிற புத்தாண்டு ஒரு தொடக்கமாக அமையட்டும். தமிழக மக்கள்அனைவருக்கும் மனப்பூர்வமான ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.