நீங்கள் திருக்குறளை எவ்வளவு அலசி ஆராய்ந்தாலும் அது கிடைக்காது! ஆளுநர் ரவிக்கு பாடம் எடுத்த காங்கிரஸ்
சென்னை: ஆளுநர் ரவி திருக்குறளை படித்து வருவது வரவேற்கத்தக்கது என்றும் ஆனால் அதன் அர்த்தத்தை தவறுதலாக புரிந்துகொள்வது ஏற்கத்தக்கதல்ல எனவும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
திருக்குறளில் எந்த மதத்தைப் பற்றியோ, மொழியைப் பற்றியோ, இறை வழிபாட்டை பற்றியோ, மன்னர்களை பற்றியோ அல்லது அன்று வாழ்ந்த வள்ளல்களை பற்றியோ திருவள்ளுவர் குறிப்பிடவில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக ஆளுநர் கருத்துக்கு ஆட்சேபனை தெரிவித்து கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள பதிவின் விவரம் வருமாறு;
மீண்டும் மீண்டும் திருக்குறள்- ஜியு போப், ஆன்மீக நூல் சர்ச்சையை எழுப்பும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி!
ஆளுநர் ரவி
சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள் நமது ஆன்மிகத்தின் ஆதாரம் திருக்குறள் என்று சொல்லியிருக்கிறார். ஆளுநர் அவர்கள் ஒவ்வொரு குறளையும் படித்து அதனுடைய பொருளை புரிந்து கொள்ள முயற்ச்சித்து வருவது வரவேற்கத்தக்கது. திருக்குறளை ஆழ்ந்து படிப்பதன் மூலமாக மனித குலத்தைப் பற்றி நன்கு அறிந்து கொள்ள முடியும் என்பதில் இரு வேறு கருத்துகள் இல்லை.
ஆன்மிகம் -மதம்
ஆன்மிகம் என்பதை புரிந்து கொள்வதில் ஆளுநருக்கு சற்று சிரமம் இருக்கும் என்று கருதுகிறேன். ஆன்மிகம் என்பது மதத்தில் இருந்து அப்பாற்பட்டது. மதம் என்பது ஒரு குறிப்பிட்ட பிரிவை, குறிப்பிட்ட இறை வழிபாட்டை, குறிப்பிட்ட கடவுளை அமைப்பு ரீதியாக பின்பற்றுவதும், அந்த நோக்கங்களுக்காக எந்த கடுமையான செயலை செய்வதற்கும் மதம் ஒரு தூண்டு கோலாக அமையும். அதற்கான உதாரணங்கள் வரலாற்றில் ஏராளம் உண்டு.
பாடம் எடுக்கும் காங்கிரஸ்
ஒரு சிறந்த ஆன்மிகவாதி, தான் கடந்து செல்கிற பாதையில் வருகிற எந்தவொரு வழிபாட்டுத் தலத்தையும் பார்த்து முகத்தை திருப்பிக் கொள்ளாமல் அதன்மீது வன்மம் பாராட்டாமல் மனம் திறந்து, தலை வணங்கி, மரியாதை செய்துவிட்டு செல்வது தான் ஆன்மிகத்தின் பண்பு. அது மிகுந்த மன அமைதியையும், மனித மாண்பையும் கொடுக்கக் கூடியது. மிருக நிலையிலிருந்து மனித நிலையையும், மனித நிலையிலிருந்து இறை நிலையையும் அடைகிற மாபெரும் பயணம் தான் ஆன்மிகத்தின் இலக்கு.
உலகப் பொதுமறை
இதைத் திருவள்ளுவர் மிக நன்றாக அறிந்து தன்னுடைய திருக்குறளை அமைத்திருக்கிறார். அதில் எந்த மதத்தைப் பற்றியோ, மொழியைப் பற்றியோ, இறை வழிபாட்டைப் பற்றியோ, மன்னர்களைப் பற்றியோ அல்லது அன்று வாழ்ந்த வள்ளல்களைப் பற்றியோ குறிப்பிடுவதே கிடையாது. எனவே தான், அது உலகின் பொதுமறையாக கருதப்படுகிறது. நீங்கள் புரிந்து கொண்டிருக்கிற ஆன்மிகம் என்பது ஏதாவது ஒரு மதத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. ஆனால், நீங்கள் திருக்குறளை எவ்வளவு அலசி ஆராய்ந்துப் பார்த்தாலும் உங்களுக்கு அது கிடைக்காது.
வைரமுத்துவிடம் பேசுங்கள்
நீங்கள் திருக்குறளை படிக்கிற ஆர்வத்தை மெச்சுகிறேன். திருக்குறளுக்கு ஜி.யு. போப் மட்டுமல்ல, பரிமேலழகர், மு. வரதராசனார், டாக்டர் கலைஞர், நாவலர் நெடுஞ்செழியன் இன்னும் ஏராளமான தமிழறிஞர்கள் பொழிப்புரை எழுதியிருக்கிறார்கள். அவைகளையும் நீங்கள் படித்துப் பார்க்க வேண்டும். இன்னும் அது சம்மந்தமாக மேலும் தெரிந்து கொள்ள விரும்பினால், கவிஞர் வைரமுத்து போன்றவர்களோடு கலந்து பேசி அறிந்து கொள்ளலாம். நீங்கள் வேறு மொழிக்காரர் என்ற காரணத்தினால் திருக்குறளை அறிந்து கொள்கிற உங்கள் முயற்சிக்கு தமிழக காங்கிரஸ் பாராட்டு தெரிவிக்கிறது. ஆனால், ஒரு சரியான பார்வையில் அதனை புரிந்து கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறது.