மேயரை சும்மா சொல்லக் கூடாது.. பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.. ஆஹா ஓஹோவென புகழும் கே.எஸ்.அழகிரி!
சென்னை: கடந்த 48 மணி நேரத்தில் சென்னையில் 90% மழைநீர் வெள்ள பாதிப்பு சீரமைக்கப்பட்டுள்ளதால் மேயர் பிரியா ராஜனை பாராட்ட கடமைப்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
220 கி.மீ. நீளத்திற்கான மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளில் 157 கி.மீ. தூரத்திற்கான பணிகள் முடிக்கப்பட்டதால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

அதிமுக ஆட்சி
கடந்த 10 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. ஆனால், மிகுந்த நிதி நெருக்கடிகளுக்கிடையே பொறுப்பேற்ற ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்த காரணத்தால், தற்போது பெருமழையின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.

157 கிமீ முடிந்தது
ஏறத்தாழ 220 கி.மீ. நீளத்திற்கான மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளில் 157 கி.மீ. தூரத்திற்கான பணிகள் முடிக்கப்பட்டதால் மக்கள் பாதிப்புகளிலிருந்து பெருமளவில் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.தேங்கும் மழைநீரை வெளியேற்றுவதற்கு நூற்றுக்கணக்கான நீர் இரைப்பான்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உடனுக்குடன் செய்யப்பட்டுள்ளன.

மேயருக்கு பாராட்டு
பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பு கொள்ள ஏற்படுத்தப்பட்டுள்ள 1070 என்கிற இலவச தொலைபேசி அழைப்புகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டுள்ளன. கடந்த 48 மணி நேரத்தில் சென்னை மாநகரில் 90 சதவிகித மழைநீர் வெள்ள பாதிப்புகள் அகற்றப்பட்டிருப்பதை பாராட்டுகிறேன். இத்தகைய பணிகளை பல்வேறு இடர்பாடுகளுக்கிடையே நிகழ்த்துவதில் முன்னணிப் பங்கு வகித்த அமைச்சர்கள், மேயர், துணை மேயர், உட்பட அனைவரது பணிகளும் மிகுந்த போற்றத்தக்க முறையில் அமைந்திருந்தன. இதற்காக அனைவரையும் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

டெல்டா பகுதி
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும் கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டாரத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டு குறிப்பாக, விவசாயிகள் பல்வேறு இடர்பாடுகளுக்கு ஆளாகியுள்ளனர். சிதம்பரம் சுற்று வட்டார டெல்டா பாசன விளை நிலங்களில் தற்போது நடைபெறுகிற சம்பா நடவுப் பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பயிர் காப்பீடு
கடந்த 10 நாட்களாக பெய்து வருகிற கனமழை காரணமாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் சம்பா பயிர் தண்ணீரில் மூழ்கி உள்ளது. கடும் மழையினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகை வழங்குவது உள்ளிட்ட அனைத்து நிவாரண நடவடிக்கைகளையும், ஈரப்பதம் உள்ள, மகசூல் செய்யப்பட்ட நெல்லை வாங்குவதற்கு அரசு கொள்முதல் நிலையங்களை அதிக அளவில் திறக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications