டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு..! திட்டமிட்டபடி தேர்வு நடைபெறும்.. விதிமுறைகள் என்னென்ன தெரியுமா?
சென்னை : ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு மே 21ஆம் தேதி திட்டமிட்டபடி நடைபெறும் எனவும், குரூப் 2 தேர்வை எழுத 11.78 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத் தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
நெல்லை கல்குவாரி விபத்து! 5வது நபரை மீட்கும் பணி தீவிரம்! நிச்சயம் மீட்போம் - நெல்லை ஆட்சியர் உறுதி
இந்நிலையில் இந்த ஆண்டு மொத்தம் 5831 காலி பணியிடங்களுக்கு குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு வருகின்ற 21ஆம் தேதி நடைபெற உள்ளது.
குரூப் 2 தேர்வு
இதில் நேர்முகத்தேர்வு பதவிகளுக்கு 116 இடங்களுக்கும், நேர்முக தேர்வு அல்லாத பதவிகளுக்கு 5413 இடங்களுக்கும் என மொத்தம் 5529 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது. இந்த தேர்வில் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். 100 கேள்விகள் மொழிப்பாடத்திலும், 75 கேள்விகள் பொது அறிவிலும், 25 கேள்விகள் திறனாய்வு என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். 90 மதிப்பெண்கள் மேல் பெற்றவர்கள் தேர்வில் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள் எனவும் ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருந்தது.
பாலச்சந்திரன் பேட்டி
இந்நிலையில் குரூப் 2 தேர்வு தொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தேர்வாணையத் தலைவர் பாலச்சந்திரன் பல்வேறு தகவல்களை தெரிவித்தார். அதில்," குரூப் 2, 2A தேர்வு முடிவுகளை ஜூன் மாத இறுதியில் வெளியிட திட்டமிடப்படுள்ளது. ஒரு பணியிடத்திற்கு 10 பேர் வீதம் முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். குரூப் 2 தேர்வை 79,000 பேர் தமிழில் தேர்வெழுத விண்ணப்பித்துள்ளனர்.
11.78 லட்சம் பேர் விண்ணப்பம்
குரூப் 2 தேர்வை எழுத மொத்தமாக 11.78 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், கடந்த ஆண்டுகளை விட கூடுதலாக 2 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர். தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் 117 மையங்களில் குரூப் 2 தேர்வு நடைபெற உள்ளது. சென்னை மட்டும் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் 1.15 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர்.
பெண்கள் அதிகம்
இதுவடை 9.10 லட்சம் பேர் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துள்ள நிலையில், ஆண்களை விட பெண்கள் அதிக எண்ணிக்கையில் தேர்வெழுத விண்ணப்பித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 5,000 பேர் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு 9.30 மணி முதல் 12.30 மணி வரை என 3 மணி நேரம் நடைபெறும். 8.30 மணிக்கு தேர்வர்கள் தேர்வுக் கூட அறைக்கு வர வேண்டும். 9 மணிக்குப் பிறகு வரும் தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்." என கூறினார்.