சுட்டெரிக்கும் வெயில்... அதிகரிக்கும் வெப்பநிலை - அனல் காற்றால் தவிக்கும் மக்கள்
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இரண்டு முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னை: பங்குனி மாத வெயில் ஆரம்பத்திலேயே சுட்டெரிக்க ஆரம்பித்துள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டிற்கு மேல் பதிவாகியுள்ளது. பகலில் தொடங்கி மாலை வரை அனல் காற்று வீசுவதால் மக்கள் தவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை மழை வெளுத்து வாங்கியது. ஆறுகளில் வெள்ளம் பெறுகியது. அணைகளில் தண்ணீர் நிரம்பியுள்ளது. ஏரி, குளங்கள் நிரம்பியுள்ளதால் தண்ணீர் பஞ்சம் வர வாய்ப்பு இல்லை.
மழைகாலம், குளிர்காலம் முடிந்து கோடை காலம் ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் 8க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வெப்பநிலை 101 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் பதிவாகியுள்ளது.

சுட்டெரிக்கும் வெப்பம்
மதுரை, சேலத்தில் அதிகபட்சமாக 39 டிகிரி செல்சியஸ் (102 டிகிரி பாரன்ஹீட்) வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னையில் 34 டிகிரி செல்சியஸ் ( 99 டிகிரி பாரன்ஹீட் ) வெப்பநிலை பதிவாகியுள்ளது. குளுமையாக காணப்படும் கோவையில் காலை முதலே அனலடித்தது அங்கு 38 டிகிரி செல்சியஸ் (101டிகிரி பாரன்ஹீட்) வெப்பம் பதிவானது. இதே போல தருமபுரி, கரூர், பரமத்தி ஆகிய நகரங்களிலும் வெயில் சுட்டெரித்தது.

அனலடிக்கும் நகரங்கள்
காலை முதலே பல ஊர்களிலும் வெயில் சுட்டெரித்ததோடு அனல் காற்றும் வீசியது. மாலை நேரங்களில் அனலோடு புழுக்கமாகவும் இருந்ததால் மக்கள் வியர்வையில் குளித்தனர். மார்ச் தொடக்கத்திலேயே வெப்பம் அதிகரித்துள்ளதால் அக்னி நட்சத்திர காலத்தில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

கோடை மழை வருமா
சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதமாக ஜில்லென்று அவ்வப்போது மழை பெய்தால் மட்டுமே கோடை காலத்தில் தப்பிக்க முடியும். வெப்பச்சலனத்தால் மழை பெய்ய வேண்டும் என்று வருணபகவானை வேண்டிக்கொண்டிருக்கின்றனர் மக்கள். பல மாவட்டங்களிலும் வறண்ட வானிலையே காணப்படுகிறது.

பழக்கடைகளை நாடும் மக்கள்
வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வீட்டிற்குள் முடங்கியிருந்தாலும் வீட்டை விட்டு வெளியே அவசியத்தேவைக்காக வரும் மக்கள் பழக்கடைகளையும் ஜூஸ் கடைகளையும் நாடி வருகின்றனர். தர்பூசணி விற்பனை சூடு பிடித்துள்ளது.












Click it and Unblock the Notifications