கோடையில் தட்டி எடுக்கப்போகும் கனமழை... ஆரஞ்ச் அலர்ட் விடுத்த வானிலை மையம்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் என்றும், அடுத்த 48 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தின் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்கள்,புதுக்கோட்டை,கடலுார்,அரியலுார்,மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிக கன மழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை மையம்.
Recommended Video
கோடை வெயிலுக்கு ரெஸ்ட் கொடுத்து விட்டு கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக தாராபுரத்தில் 15 செ.மீ., தென்காசி ஆய்க்குடியில் 12 செ.மீ. மழை பதிவானது. சங்கரகோவில் 11, தென்காசியில் 10, சிவகிரியில் 8, பாம்பனில் 7 செ.மீ. மழை பதிவானது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேற்குத்தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்துவரும் மழையால் குற்றாலம் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த கோடை மழையால் தென் மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகளுக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து வருகிறது. இதேபோல தமிழத்தின் தென் மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

5 நாட்களுக்கு கனமழை
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் என்றும், அடுத்த 48 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென் மாவட்டங்கள்,புதுக்கோட்டை,கடலுார்,அரியலுார்,மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிக கன மழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை மையம்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கேரள கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்றைய தினம் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகம், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமுதல் மிககன மழையும், ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

இடி மின்னலுடன் மழை
14ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்தமிழகம், நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. 15ஆம் தேதியன்று தென்தமிழகம், நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மிதமான மழைக்கு வாய்ப்பு
16 மற்றும் 17ஆம் தேதிகளில் தென்தமிழகம், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கு அறிவிப்பு
இன்றும் நாளையும் தென்தமிழக, கேரளா கடலோரப்பகுதிகள், குமரிக்கடல், லட்சத்தீவு பகுதி, தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications