ஒலிம்பிக்.. தமிழ்நாட்டின் 5 தடகள வீரர்களுக்கும் தலா ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை.. முதல்வர் அறிவிப்பு!
சென்னை: ஜப்பான் டோக்கியோவில் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டு தடகள வீரர்களுக்கு ஊக்கத்தொகையாக தலா ரூபாய் 5 இலட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஜூலை மாதம் 23ம் தேதி ஜப்பானின் டோக்கியோவில் ஒலிம்பிக் நடக்க உள்ளது. ஆகஸ்ட் 8ம் தேதி வரை இந்த போட்டிகள் நடக்க உள்ளன. கடந்த வருடம் நடக்க வேண்டிய போட்டிகள் கொரோனா காரணமாக இந்த வருடம் தள்ளி வைக்கப்பட்டது.

மிகவும் பாதுகாப்பான சூழ்நிலையில் இந்த வருடம் ஒலிம்பிக் நடக்க உள்ளது. கொரோனாவிற்கு இடையே இந்த போட்டிகள் நடக்க உள்ள நிலையில் இதற்காக பல்வேறு புதிய விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன.
இதில் தடகள போட்டியில் ஜூலை 31ல் நடக்கிறது. இதில் இந்தியா சார்பாக கலந்து கொள்ளும் 26 வீரர்களில் 5 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டு தடகள வீரர்களுக்கு ஊக்கத்தொகையாக தலா ரூபாய் 5 இலட்சம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றால் ரூ.3 கோடி பரிசு வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதோடு வெள்ளிப் பதக்கம் வென்றால் ரூ.2 கோடி, வெண்கலம் வென்றால் ரூ.1 கோடி வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்து இருந்த நிலையில் இந்த ஊக்க தொகை வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தடகள பிரிவிற்கு தமிழ்நாட்டில் இருந்துதான் அதிக வீரர்கள் தேர்வாகி உள்ளனர். தனலெட்சுமி சேகர், ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டி, ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன் ஆகியோர் தேர்வாகி உள்ளனர். இவர்களுக்கு தலா 5 லட்சம் ஊக்கதொகை வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டில், ஒலிம்பிக்கில் இந்தியாவிற்குப் பெருமை சேர்க்க பங்கேற்கவுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களை நெஞ்சார வாழ்த்துகிறேன். வீரர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டு, ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது. வீரர்களின் வெற்றி ஓட்டம் தொடரட்டும்! பதக்கங்கள் குவியட்டும், என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக ஒலிம்பிக்கின் மற்ற பிரிவு போட்டிகளுக்கு தேர்வான டி.மாரியப்பன், சி.ஏ.பவானி தேவி உள்ளிட்ட 7 தமிழ்நாடு வீரர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications