நாளை பாமக புத்தாண்டு பொதுக்குழு.. அன்புமணிக்கு புதிய பதவி?
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்,''2021-ஆம் ஆண்டுக்கு விடை கொடுப்போம்;2022-ஆம் ஆண்டை வரவேற்போம்'' என்ற தலைப்பில் நாளை அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெறவுள்ள நிலையில், அன்புமணிக்கு புதிய பதவி தருவது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்குப்பிறகு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மாவட்டம் மாவட்டமாக சென்று நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். கூட்டங்களில் அவர் பேசும் பேச்சு அடுத்த நாள் முக்கிய விவாதப் பொருளாக மாறி வருகிறது.
திமுகவை பாராட்டியது, அதிமுக துரோகம் செய்தது, வன்னியர்கள் என் பின்னால் வரவில்லை என அவர் பேசியது தமிழக அரசியலில் முக்கியத்துவம் பெற்றது. இதற்கு எடப்பாடி பழனிசாமி முதலானோர் தகுந்த பதிலையும் கொடுத்து வந்தனர்.

புத்தாண்டு பொதுக்குழு கூட்டம்
இந்த நிலையில்தான் , பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்,''2021-ஆம் ஆண்டுக்கு விடை கொடுப்போம்;2022-ஆம் ஆண்டை வரவேற்போம்'' என்ற தலைப்பில் சென்னை சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலையில் பொதிகை தொலைக்காட்சி நிலையத்திற்கு எதிரில் உள்ள அண்ணா அரங்கத்தில் நாளை நடைபெறும் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் இராமதாஸ் ஆகியோர் முன்னிலையில், தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

பணித்திட்டங்கள் குறித்து ஆலோசனை
இந்தக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுடன் ராமதாஸ், புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக் கொள்வார் எனவும், 2021-ஆம் ஆண்டில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்ட கட்சி மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்படுவதுடன், 2022ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணித்திட்டங்கள் குறித்து இந்தப் புத்தாண்டு சிறப்புப் பொதுக்குழு கூட்டத்தில் விரிவாக விவாதித்து முடிவெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

கூட்டணி குறித்து ஆலோசனை
பொதுவாக சில விஷயங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தாலும் நாளை நடைபெற உள்ள பாமக பொதுக்குழு கூட்டத்தில் வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதிமுக கூட்டணியிலிருந்து பாமக வெளியேறி விட்டதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி முன்னரே கூறியிருந்த நிலையில் திமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளதா என்பது குறித்தும் அல்லது தனித்து போட்டியிடலாமா என்பது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்படும் உள்ளதாக தகவல்கள் வெளியாக இருக்கிறது.

அன்புமணிக்கு புதிய பதவி
திமுகவில் உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டது போல, பாட்டாளி மக்கள் கட்சியில் அன்புமணி ராமதாசுக்கு இளைஞர் அணி தலைவர் பொறுப்பை விட அதிக முக்கியத்துவம் தரும் வகையில் வேறு ஒரு பதவியை வழங்கலாமா என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே அன்புமணியை பாமக தலைவராக நியமிக்க வேண்டுமென சில வட மாவட்ட முக்கிய மற்றும் மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தி வரும் நிலையில் நாளை இதுகுறித்து விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக உறுதிப்படுத்தபடாத தகவல்கள் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications