அப்டி போடு.. பஸ் படிக்கட்டில் மாணவர்கள் பயணம் செய்தால்.. டிரைவர், கண்டக்டர் மீது கடும் ஆக்ஷன்..!
போக்குவரத்து துறை முக்கிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது
சென்னை: பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்தால் டிரைவர் மற்றும் கண்டக்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது..!
Recommended Video
சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால் ரூட் தலை விவகாரம் அடிக்கடி தலைதூக்குவது வழக்கம்.. போலீசாரும், சம்பந்தப்பட்ட பெற்றோரை வரவழைத்து பேசி எச்சரிக்கை செய்வார்கள்.. அதேபோல கல்லூரி நிர்வாகமும் போலீசாருடன் இதுசம்பந்தமாக பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது.
மாணவர்களின் எதிர்கால நலன் கருதி அவர்களை பலமுறை எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.. ஆனாலும், காலேஜ் திறந்த முதல்நாளே மாணவர்கள் போலீசில் சிக்கி கொள்வார்கள்..
பள்ளி மீது கல்வீசி தாக்குதல்... மதமாற்றம் செய்ததாக புகார்... மாணவர்கள், ஆசிரியர்கள் ஓட்டம்
கம்பிகள்
பஸ்களின் மேற்கூரையிலும், படிக்கட்டுகளிலும், ஜன்னல் கம்பிகளை பிடித்து கொண்டும் தொங்கியபடியே ஆபத்தான முறையில் பயணம் செய்வார்கள்.. மேற்கூரையில் நின்று கொண்டே, டான்ஸ் ஆடுவதும், விசில் அடிப்பதும், பாட்டு பாடுவதும் என ரகளையில் ஈடுபடுவார்கள்.. இது சம்பந்தமான வீடியோக்களும் இணையத்தில் அவ்வப்போது வெளியாகி பதைபதைப்பை உண்டாக்கிவிடும்.. சில சமயம் இந்த பிள்ளைகளின் கையில் பெரிய அரிவாள்களும் இருக்கும்.. இளம்கன்று பயமறியாது என்றாலும், எத்தனையோ முறை எதிர்பாராத விபத்துக்களை இந்த இளைஞர்கள் சந்திக்க நேரிடுகிறது..
சாட்டை
இவர்களால் பஸ் ஓட்டுனர்கள், நடத்துனர்கள், பயணிகள், பொதுமக்கள் என பலரும் பல இன்னல்களுக்கு ஆளாகி வருவதையும் மறுக்க முடியாது. இப்படிப்பட்ட சூழலில்தான், சாட்டையை கையில் எடுத்துள்ளது போக்குவரத்து துறை.. பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்தால் டிரைவர் மற்றும் கண்டக்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.. சமீபத்தில் திருவள்ளூர் மெய்யூர் பகுதியில் அரசு பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி சாகசம் மேற்கொண்ட பள்ளி மாணவர்களின் வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலானது. அந்த மாணவர்களை அடையாளம் கண்ட பெரியபாளையம் போலீசார், மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
விபத்து
இந்நிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்ய போது ஏற்படும் விபத்துகளை தவிர்க்கும் நோக்கில் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு போக்குவரத்து துறை சில அறிவுரைகளை வழங்கியிருக்கிறது. அதன்படி, மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்தால் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பயணிகள் பாதுகாப்பான முறையில் பேருந்தில் ஏறி இறங்குவதை உறுதி செய்த பின்பே பேருந்துகளை இயக்க வேண்டும்.
பேருந்து
பள்ளி கல்லூரிகள் மற்றும் அனைத்து நிறுத்தங்களிலும் பேருந்தை நிறுத்தி அனைவரையும் ஏற்றிச் செல்ல வேண்டும்.மாணவர்கள் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்யாதவாறு ஓட்டுனரும், நடத்துனரும் பணியாற்ற வேண்டும். பேருந்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், கூடுதல் பேருந்துகள் இயக்க போக்குவரத்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.. பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பயணிகள் பாதுகாப்பான முறையில் ஏறி இறங்குவதை உறுதி செய்த பின்பு பேருந்துகளை இயக்க வேண்டும்..
அறிவிப்பு
தணிக்கையாளர்கள் வழித்தடங்களில் ஆய்வு மேற்கொள்ளும்போது படிக்கட்டு பயணத்தை முற்றிலும் தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். புகார்கள், சம்பவங்கள் ஏற்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட ஓட்டுநர், நடத்துனர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலனில் அக்கறை செலுத்தி போக்குவரத்து துறை வெளியிட்ட இந்த அறிவிப்பு மிகுந்த முக்கியத்துவத்தை பெற்றோர்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது.