"பிளாஸ்டிக் சேர்.." அதிரடி ரெய்டில் 35 லட்சம், நீ எஸ்சி-தானே? ராஜ கண்ணப்பனை சுற்றி வளைத்த சர்ச்சைகள்
சென்னை : ராமநாதபுரத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரை போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஜாதி ரீதியாக திட்டியதாக புகார் எழுந்துள்ள நிலையில் இவர் சர்ச்சைகளில் சிக்குவது ஒன்றும் புதிதல்ல என்றும், ஏற்கனவே இது போன்ற பல சர்ச்சைகளில் சிக்கியவர்தான் அமைச்சர் என கூறப்படுகிறது. இந்நிலையில் அமைச்சர் பொறுப்பு மாற்றப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தமிழக போக்குவரத்துறை அமைச்சருமான ராஜகண்ணப்பன் தற்போது அரசு அதிகாரி ஒருவரை சாதிய வன்மத்தோடு திட்டியிருப்பதாக அந்த அதிகாரி அதிரடி புகார் அளித்திருக்கிறார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரான ராஜேந்திரன் தான் அந்த பகீர் புகாரை கிளப்பியிருப்பவர். இவரை தான் அமைச்சர் ராஜகண்ணப்பன் ஜாதி ரீதியாக திட்டியதாக புகார் எழுந்துள்ளது.

அதிகாரி புகார்
என்னை இப்படி யாரும் திட்டியது இல்லை. எனக்கு மனக்காயம் ஏற்பட்டுள்ளது. எனக்கு தூக்கம் இல்லை. சாப்பிட முடியவில்லை. இது பற்றி ஆட்சியர், துணை ஆட்சியரிடம் பேச முடியவில்லை. அதனால் இப்போது செய்தியாளர்களை சந்தித்து என் கஷ்டத்தை சொல்கிறேன் என்று முதுகுளத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் தெரிவித்துள்ள நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் இந்த விஷயத்தை கையில் எடுத்துள்ளன.

அமைச்சர் ராஜகண்ணப்பன்
சமத்துவம் சமூக நீதி என்பது மக்களுக்கு மட்டும்தானா திமுக அமைச்சர்களுக்கு கிடையாதா என மநீம கேள்வி எழுப்பியுள்ளது சமூக வலைதளங்களிலும் இந்த விவகாரம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அமைச்சர் தரப்பில் இந்த சம்பவம் குறித்து எவ்வித விளக்கமும் தராத நிலையில் அதற்கான காரணம் என்ன எனவும் கேள்வி எழுப்பப்படுகிறது. அதே நேரத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், இதுபோன்ற சர்ச்சைகளில் சிக்குவது ஒன்றும் புதிதல்ல ஏற்கனவே இதே போல ஒரு குற்றச் சாட்டில் சர்ச்சை ஏற்பட்ட நிலையில் அது அப்படியே அமைதியாகி போனது.

பிளாஸ்டிக் சேர் சர்ச்சை
கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் முப்பத்தி ஒன்றாம் தேதி ராஜ கண்ணப்பனின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை வாழ்த்த அவரது இல்லத்திற்கு நேரில் சென்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன். அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து அவருடன் அமர்ந்து பேசுவது போல வெளியிடப்பட்ட புகைப்படம்தான் பெரும் சர்ச்சையை கிளப்பியது சோபாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் சாய்ந்தபடி அமர்ந்திருக்க பழைய பிளாஸ்டிக் சேரில் திருமாவளவன் அமர்ந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது.

திருமாவளவன் அவமதிப்பு
அமைச்சர் ராஜகண்ணப்பன் சாதிய மனநிலையோடு தான் இப்படி நடந்து கொண்டார் என கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப் பட்ட நிலையில், திருமாவளவனும் அமைதியாக இருந்தது ஏன் என்று கேள்வி எழுந்தது. ஆனால் விரும்பியே திருமாவளவன் பிளாஸ்டிக் சேரில் அமர்ந்ததாகவும் இதனை பெரும் விவாதமாக்க தேவையில்லை எனவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கோரினர், அதோடு அந்த விவகாரம் முடிவுக்கு வந்தது.

அதிரடி ரெய்டு
பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பனின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை துணை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில் ரூ.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. போக்குவரத்து துணை ஆணையர் நடராஜன், தனது துறையில் கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு பெற தகுதியுடையவர்களிடம் 3 லட்சம் முதல் ரூ5 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றதாக லஞ்சம் ஒழிப்புத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் நடத்திய சோதனையில் தான் கட்டுக் கட்டாக லஞ்சப் பணம் சிக்கியது. ஆனால் இதுகுறித்து அமைச்சர் ராஜகண்ணப்பன் எதுவுமே கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சிக்கல்
புகாரில் சிக்கிய நடராஜன் மீது நடவடிக்கை எடுக்க பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், இந்த விவகாரத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் குறித்தும் புகார்கள் மேலிடத்துக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியானது. பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்து அடுத்த அமைச்சரவை மாற்றத்துக்குப் பின்னர் போக்குவரத்து துறை அமைச்சராக ராஜ கண்னப்பன் தொடர்வது நிச்சயம் இல்லை என அப்போது பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அதிகாரி ஒருவரை அமைச்சர் சாதிய வன்மத்தோடு பேசிய சர்ச்சை அவருக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ள நிலையில்,அமைச்சர் ராஜகண்ணப்பன் மிகப் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications