கடலோர கிராமங்களை சூறையாடிய சுனாமி ... இன்று 16வது நினைவு தினம் - கண்ணீர் அஞ்சலி செலுத்திய மக்கள்
சுனாமி நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு இன்று தமிழக கடலோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் இறந்த உறவினர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சென்னை: தமிழகத்தின் கடலோர கிராமங்களை சூறையாடி பல ஆயிரம் உயிர்களை குடித்துச் சென்ற சுனாமியின் 16ஆம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சுனாமி தாக்கியதில் உயிரிழந்த ஆயிரக்கணக்கானோரின் உறவினர்கள் இன்று கடற்கரையில் குவிந்து பால் ஊற்றி படையல் இட்டு தங்களின் உறவுகளுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
Recommended Video
இந்தியாவில் ஏற்பட்ட இயற்கைப் பேரழிவுகளில் மறக்க முடியாத ஒன்று சுனாமி. கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி வங்கக்கடலில் ஆழிப்பேரலை ஏற்படுத்திய கோர தாண்டவத்தை இப்போது நினைத்தாலும் நடுக்கம் ஏற்படுகிறது. ஓங்கி உயர்ந்த அலைகள் கடலோர பகுதிகளை சுருட்டி வாயில் போட்டுக்கொண்டது.
அதிகாலை நேரத்தில் இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் எதிரொலியாக கடலில் உருவான சுனாமியால் பல நாடுகள் பாதிக்கப்பட்டன. இதில் பல ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். சுனாமி சூறையாடி விட்டுச் சென்று 16 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது என்றாலும் தமிழகத்தின் ஒவ்வொரு கடலோர கிராமத்துக்கும் சுனாமி ஏற்படுத்திச் சென்ற சுவடுகள் இன்னமும் இருக்கின்றன.
சென்னை முதல் குமரி வரை
சென்னை முதல் கன்னியாகுமரி வரை அத்தனை கடலோர கிராமங்களிலும் ருத்ரதாண்டவமாடிவிட்டுப் போனது இந்த சுனாமிப் பேரலை. சென்னை மெரினா கடற்கரையில் அதிகாலையில் நடைபயிற்சிக்கு சென்றவர்கள், அயர்ந்து உறங்கிய மீனவர்கள், சிறுகடை வியாபாரிகள் என நூற்றுக்கணக்கானோரை ஆழிப்பேரலை கடலுக்குள் அள்ளிச் சென்று உயிரை குடித்து விட்டு துப்பியது.
உயிரிழந்த மக்கள்
சென்னையைத் தொடர்ந்து மிக மோசமான பாதிப்புகளை எதிர்கொண்டது நாகை வேளாங்கண்ணி. கடலூர் மாவட்டத்தில் கடற்கரை மணற்பரப்பு முழுவதும் கொத்து கொத்தாக உயிரிழந்தவர்களை அடுக்கி வைத்திருந்ததை இப்போது நினைத்தாலும் உயிர் பதைபதைக்கிறது.
கண்ணீர் அஞ்சலி
சுனாமி தாக்கிய 16ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று உறவினர்கள் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினர். மெரீனா கடற்கரையில் குவிந்த மீனவ கிராம மக்கள் கடலுக்குள் பாலை ஊற்றி பூக்களை தூவி வழிபாடு நடத்தினர். மறைந்த உறவினர்களுக்கு பிடித்த உணவுப்பண்டங்களை வைத்தும் படையலிட்டனர்.
கடலில் பால் ஊற்றி வழிபாடு
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத்துறையில்ல் சுனாமி நினைவு தினத்தை ஒட்டி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அஞ்சலி செலுத்தினார். அமைச்சர் ஓ.எஸ்.மணியனுடன் எம்.பி. செல்வராஜ் உள்ளிட்டோரும் கடலில் பாலை ஊற்றி அஞ்சலி செலுத்தினர். மீன்பிடி இறங்குதளத்தில் மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர் தூவியும் மீனவர்கள், கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
மீனவர்கள் கண்ணீர்
கன்னியாகுமரியில் சுனாமி நினைவு தூண் அமைக்கப்பட்ட இடங்களில் வழிபாடுகள் நடத்தப்பட்டன. ஏராளமானோர் கண்ணிர் அஞ்சலி செலுத்தினர். இந்த துயர நாளை முன்னிட்டு மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை.