கூட்டுறவு சங்க முறைகேடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடணும்.. தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கோரிக்கை
சென்னை: கடந்த அதிமுக ஆட்சியின்போது 2018-ம் ஆண்டு கூட்டுறவு சங்க தேர்தல்கள் நடத்தப்பட்டன. இந்த கூட்டுறவு சங்கங்களின் தேர்தல்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.
இதனால் 400 கூட்டுறவு சங்கங்களுக்கு மீண்டும் தேர்தல் நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதிமுக ஆட்சிக்காலத்தில் நடத்தப்பட்ட அனைத்து கூட்டுறவு சங்க தேர்தல்களும் ரத்து செய்யப்படும் என்று ஆட்சிக்கு வந்தவுடன் திமுக கூறியது.

கூட்டுறவு சங்க மசோதா
இதற்கிடையே அதிமுக ஆட்சியில் நடந்த கூட்டுறவு சங்கத் தேர்தலை ரத்து செய்து கூட்டுறவு சங்கங்களை கலைப்பது குறித்து தமிழக சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மூலம் கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் 5 ஆண்டுகள் பதவிக்காலம் 3 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுகிறது. ஆனால் அதிமுக அரசு இந்த சட்டமசோதாவுக்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

அதிமுக எதிர்ப்பு
இந்த நிலையில் கூட்டுறவு சங்கங்களில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-
நிதி மோசடிகள் நடைபெற்றதாகக் கூறி தமிழகத்திலுள்ள கூட்டுறவு சங்கங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாக அமைப்பை கலைக்க சட்டம் கொண்டுவந்துள்ள திமுக அரசு, அத்தகைய முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?

வெள்ளை அறிக்கை வேண்டும்
முன்பு நடத்தப்பட்ட கூட்டுறவுத் தேர்தலில் பழனிசாமி கம்பெனியோடு 60:40 பங்கீட்டில் திமுகவினர் சேர்ந்து கொண்டுதானே ஏறத்தாழ எல்லா கூட்டுறவு சங்கங்களிலும் பதவிக்கு வந்தார்கள்? அப்படியென்றால், கூட்டுறவு சங்கங்களில் நடந்திருப்பதாக தற்போதைய திமுக அரசு கூறும் மோசடிகளில் அவர்களது கட்சியினருக்கும் பொறுப்பு இருக்கிறதல்லவா? எந்தெந்தக் கூட்டுறவு சங்கங்களில் என்னென்ன முறைகேடுகள் நடைபெற்றன? அதற்கு காரணமானவர்கள் யார்? என்பதைப் பற்றி தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

தி.மு.க.வினர் கபளிகரம்
அதைச் செய்யாமல் கூட்டுறவு சங்கங்களின் பதவிக்காலத்தை குறைப்பதாலோ, பதவிகளின் பெயர்களை மாற்றுவதாலோ அவற்றில் மலிந்திருக்கிற சீர்கேடுகளைச் சரிசெய்ய முடியாது. மாறாக, கூட்டுறவு சங்கங்களை மொத்தமாக தி.மு.க.வினர் கபளிகரம் செய்துகொள்ளவதற்கே அரசின் இந்த நடவடிக்கை வழிவகுக்கும். இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications