அண்ணே ‘அவரு’ மட்டும் வேண்டாம்! டெல்லி லாபி செய்யும் டிடிவி! எடப்பாடிக்கு கிளியர் மெசேஜ் சொன்ன ‘மாஜி’
சென்னை : நீண்ட காலத்திற்குப் பிறகு தமிழக அரசியலில் பேசு பொருளாக மாறி இருக்கிறார் டிடிவி தினகரன். ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுகவில் அதிகாரமையமாக வலம் வந்த அவர் தற்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு குடைச்சல் கொடுக்கும் அளவுக்கு மீண்டும் லைம் லைட் அரசியலுக்கு வந்திருக்கிறார்.
தற்போது அரசியலுக்கு வந்திருப்பவர்களுக்கு பெரும்பாலும் டிடிவி தினகரன் யார் என தெரியாது. ஆனால் ஒரு காலத்தில் அதிமுகவின் அதிகாரமிக்க பதவியான பொதுச் செயலாளருக்கு அடுத்த பொருளாளர் பதவியை வகித்தவர்.
நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். அவர் மூலம் அரசியலில் அடி எடுத்து வைத்தவர் தான் ஓ.பன்னீர்செல்வம். அதன்பிறகு முதலமைச்சர் அளவுக்கு ஓ.பன்னீர்செல்வம் உயர்ந்த நிலையில் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக அதிமுகவிலிருந்தும் போயஸ் கார்டனில் இருந்தும் முற்றாக விலக்கி வைக்கப்பட்டார் டிடிவி.

டிடிவி தினகரன்
அதன் பிறகு அரசியல் எதிர்காலம் சூனியமான நிலையில் ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு மீண்டும் அதிமுகவில் அவரது செல்வாக்கு உயர்ந்தது. சசிகலா பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது மீடியா வெளிச்சத்திற்குள் வந்த அவர் அதன் பிறகு ஆர்கே நகர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு தமிழகம் முழுவதும் மீண்டும் பரிட்சயமானார். அதிலிருந்து தற்போது வரை அறிக்கை, ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் என அரசியலில் களமாடி வருகிறார்.

பாஜகவுடன் நெருக்கம்
அதன் பிறகு சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி, ஊரக உள்ளாட்சித் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் பலத்த அடியென அடுத்தடுத்து சறுக்கல்களை சந்தித்து வந்த அவர் தற்போது பாஜக தலைமையுடன் நெருக்கம் காட்டி வருகிறார். கடந்த காலங்களில் பாஜகவுடன் மோதல் காரணமாக பல்வேறு சிக்கல்களை சந்தித்த அவர் தற்போது தனது கட்சியின் எதிர்காலம் மற்றும் இன்னும் 'சில குறிப்பிட்ட' விஷயங்களை மனதில் வைத்து பாஜக தலைமையுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

அதிமுக கூட்டணி
இதனால் அதிமுக கூட்டணியில் அவரை சேர்த்துக் கொள்ள வேண்டும் என பாஜக விரும்புகிறது. திமுகவை வீழ்த்த அதிமுகவோடு கூட்டணி வைக்க தயார் என டிடிவி தினகரன் வெளிப்படையாகவே பேசி வரும் நிலையில் அது இந்த தகவலை இன்னும் உறுதிப்படுத்தி இருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு தொகுதிகளை உள் ஒதுக்கீடாக ஒதுக்க பாஜக விரும்பினாலும் எடப்பாடி பழனிச்சாமி ஏற்றுக்கொள்ளவில்லை. தற்போதும் டிடிவி தினகரன் மீண்டும் அதிமுகவில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எடப்பாடி பழனிச்சாமி
இந்த நிலையில் இது குறித்து எடப்பாடி பழனிச்சாமி தனக்கு நெருக்கமான சில முன்னாள் அமைச்சர்களிடம் பேசியிருக்கிறார். ஓ பன்னீர்செல்வத்தை கூட சமாளித்து விடலாம். ஆனால் டிடிவி தினகரன் மீண்டும் கட்சியிலோ, கூட்டணியிலோ இணைத்தால் நம்மை ஓரம் கட்டி விடுவார். அதனால்மீண்டும் டிடிவி தினகரன் என்ற பேச்சே வேண்டாம் என தெளிவாக கூறியிருக்கின்றனர். இதனால் தான் அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரனுக்கு இடமே இல்லை என வெளிப்படையாக பாஜகவுக்கு மெசேஜ் கொடுத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

டெல்லி சோர்ஸ்
இதன் மூலம் அதிமுகவிலும் அதிமுக கூட்டணியிலும் டிடிவி தினகரன் இல்லை என்பது தான் எடப்பாடியின் முடிவாக இருக்கிறது. அதே நேரத்தில் கடந்த காலங்களில் பாஜக மூலம் சிக்கல்களை சந்தித்த டிடிவி தினகரன் தற்போது பாஜகவை வைத்து அதிமுகவில் தனக்கு வேண்டியதை சாதித்துக் கொள்ள தயாராக இருக்கிறார். அதற்காக அவர் ஓபிஎஸ் மட்டுமல்ல யாருடன் வேண்டுமானாலும் கரம் கோர்க்க தயாராக இருக்கிறார். மேலும் டெல்லி சோர்ஸ்கள் மூலம் அமித் ஷாவை சந்திக்கவும் நேரம் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனால் வரும் காலங்களில் இன்னும் சில மாற்றங்கள் நிகழும் என்கின்றனர் அவர் தரப்பு நிர்வாகிகள்.












Click it and Unblock the Notifications