ஆக அப்ப அதுதானா? பாஜக கூட்டணியில் இணைவது குறித்த கேள்விக்கு டிடிவி தினகரன் சொன்ன பதிலை பாருங்க!
சென்னை: பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்து கொண்ட நிலையில் பாஜகவுடன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கூட்டணி அமைக்குமா? என்ற கேள்விக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பதிலளிக்கவில்லை.
தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் கூறியதாவது: எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் இருந்ததுதான் உண்மையான அண்ணா திமுக. களவாடப்பட்ட, கையகப்படுத்தப்பட்ட அண்ணா திமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். ஜெயலலிதா பற்றி பேசிய போது அமைதியாக இருந்தனர்; அப்போதும் கூட டெல்லிக்கு போய் கூட்டணி பற்றி பேசினர். ஏதோ ஏமாற்றத்துடன் திரும்பி இருப்பதாக தெரிகிறது.

டெல்லியில் ஏமாற்றம்: இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் எல்லாம் டெல்லிக்கு படையெடுத்து போனார்கள். அவர்கள் யாரையோ சந்திக்க காத்திருந்து, சந்திக்க முடியாமல் திரும்பி இருக்கிறார்கள். அந்த ஏமாற்றம்தான் இப்ப. அதனால்தான் அண்ணாவை பற்றி பேசிவிட்டார்கள்.. கூட்டணியில் இருந்து விலகுகிறோம் என காரணம் சொல்கின்றனர். ஆனால் அதைத் தாண்டிய காரணம் இருக்கலாம்.
ஏமாற்றிய எடப்பாடி பழனிசாமி: ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவை விட்டு ஒதுங்கிய போது சசிகலா, ஜெயலலிதா ஆட்சியில் முக்கிய அமைச்சராக இருந்த காரணத்தால்தான் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பொறுப்புக்கு கொண்டு வந்தார். சசிகலாவுக்கும் நன்றி இல்லாமல்.. எடப்பாடி பழனிசாமி ஆட்சி தொடருவதற்கு காரணமாக இருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கும் நன்றி இல்லாமல் ஏமாற்றிவிட்டார் எடப்பாடி பழனிசாமி.
துரோகம் ரத்தத்தில் இருக்கு: மத்தியில் ஆளும் பாஜகவின் துணையுடன் 4 ஆண்டுகள் அதிமுகவை எடப்பாடி பழனிசாமி கையகப்படுத்தி வைத்திருந்தார். மத்தியில் உள்ள பாஜகவை காட்டிதான் கட்சியில் இருக்கும் பலரையும் உங்கள் மீது வழக்கு பாய போகிறது, அதனால் தன்னுடன் இருக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி சொன்னதாக தகவல்கள் நிறைய பார்த்திருக்கிறோம். துரோக சிந்தனை உள்ளவர்கள் எல்லோரையும் ஏமாற்றுவார்கள். துரோகம் என்பது எடப்பாடி பழனிசாமி ரத்தத்திலேயே உள்ளது. அவர் ஏமாற்றுக்காரர். இப்ப பாஜகவும் அவரை பற்றி புரிந்து கொண்டிருக்கும்.
பாஜகவுடன் கூட்டணியா?: பாஜகவில் இருந்து அழைப்பு வந்ததா? பாஜக கூட்டணியில் இணைவீர்களா? என்ற யூகங்களுக்கு இந்த நேரத்தில் பதில் சொல்ல நான் விரும்பவில்லை. சரியான நேரத்தில் சரியான முடிவை அமமுக எடுக்கும். இவ்வாறு டிடிவி தினகரன் கூறினார்.












Click it and Unblock the Notifications