எகிறி குதித்த ’மாஜி’..தேனியில் ப்ராப்ளமாமே? டிடிவிக்கு வந்த டவுட்.. ஆணையத்துக்கு பறந்த கோரிக்கை..!
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்துவதோடு, சிசிடிவி கேமிராக்கள் செயலிழப்பு போன்ற தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படாத வகையில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துவதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் வாக்குப் பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், வாக்கு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் வைக்கப்பட்டு சீலிடப்பட்டு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனை கண்காணிக்க 163 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதன் காட்சிப்பதிவு திரையில் தெரியும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.

அதே நேரத்தில் கடந்த 2 நாட்களில் 3 முறை வாக்கு எண்ணிக்கை மையங்களில் சிசிடிவி செயலிழப்பு விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறியுள்ளன.
சிசிடிவி விவகாரம்: இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சித்தோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் 2வது நாளாக சிசிடிவி பதிவுகளை காணக்கூடிய காட்சித் திரை தொழில்நுட்ப கோளாறு காரணமாக, திடீரென கறுப்பு நிறத்தில் காட்சியளித்தது. இச்சம்பவத்தால், கட்சி முகவர்களிடையே பெரும் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் மூலம் தொழில்நுட்ப வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு பிரச்சனை சரி செய்யப்பட்டது. ஆனால் சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளது என மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார். இந்நிலையில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துவதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
டிடிவி தினகரன்: இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்களில் நிகழும் குளறுபடிகள் களையப்பட வேண்டும் - தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை வாக்கு எண்ணிக்கை மையங்கள் பாதுகாப்பாக இருப்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். தேனி நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள தேனி கம்மவார் சங்கம் பொறியியல் கல்லூரி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்ற அக்கல்லூரியின் முன்னாள் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தேர்தல் ஆணையம்: அதே போல, நீலகிரி மற்றும் ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் உள்ள சிசிடிவி கேமிராக்கள் அவ்வப்போது செயலிழப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. மத்திய பாதுகாப்புப்படை, மாநில ஆயுதப்படை மற்றும் காவல்துறையினர் என மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கும் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள், நபர் ஒருவர் அத்துமீறி நுழைய முயற்சிப்பதும், அடிக்கடி தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படுவதும் பொதுமக்கள் மத்தியில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீதான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
கோரிக்கை: எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்துவதோடு, சிசிடிவி கேமிராக்கள் செயலிழப்பு போன்ற தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படாத வகையில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையத்தை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications