திடீரென காரை மறித்த தவெகவினர்.. ஒரு நொடி ஸ்டன் ஆன விஜய்.. என்ன நடந்தது! பரபரப்பு
சென்னை: தவெக தலைவர் விஜய் பனையூர் அலுவலகம் வந்து கொண்டிருந்த போது, திடீரென அவரின் காரை மறித்து சிலர் மனு அளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் தொகுதியை மட்டும் பிடித்து திருவள்ளூர் கிழக்கு என்று பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு ஆர்கே நகரைச் சேர்ந்த மணி என்பவரை மாவட்டச் செயலாளராக நியமனம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து இந்த மனு கொடுக்க முயற்சித்துள்ளனர்.
2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை இலக்காக கொண்டு தமிழக வெற்றிக் கழகம் செயலாற்றி வருகிறது. தவெக தலைவர் விஜய் இன்னும் ஓரிரு மாதங்களில் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, முழு நேர அரசியல் பணிகளில் ஈடுபடவுள்ளார். அதற்கு முன்பாக தவெகவின் கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இதற்காக ஏற்கனவே 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்று மொத்தமாக 120 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி மாத இறுதியில் தவெக தலைவர் விஜய் நேரடியாக நேர்காணல் செய்து ஒவ்வொரு நாளும் 19 மாவட்டச் செயலாளர்கள் என்று 5 கட்டமாக 95 மாவட்டச் செயலாளர்களை நியமனம் செய்தார். மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு வெள்ளி நாணயத்தையும் பரிசாக அளித்தார்.
இந்த நிலையில் தவெக 2ஆம் ஆண்டு விழா நடத்தப்பட்ட நிலையில், அடுத்தக் கட்டமாக 25 மாவட்டச் செயலாளர்களை நியமிக்க தவெக தலைவர் விஜய் உத்தரவிட்டிருந்தார். அதற்கேற்ப 25 மாவட்டச் செயலாளர்களின் பட்டியல் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திருவள்ளூர், சென்னை, தூத்துக்குடி, பெரம்பலூர் உள்ளிட்ட 6 மாவட்டச் செயலாளர்கள் நியமனத்தில் சிக்கல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை வெளியிடுவதற்காக தவெக தலைவர் விஜய் பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு புறப்பட்டார். அப்போது தவெக தொண்டர்கள் அவரை சுற்றி இரு சக்கர வாகனங்களில் வந்தனர். அப்போது விஜய்-ன் கார் அருகிலேயே வந்த இருவர், திடீரென விஜய்-யிடம் மனு அளிக்க முயற்சித்தனர்.
திருவள்ளூரில் உள்ள திருவொற்றியூர் தொகுதியை மட்டும் தனி மாவட்டமாக பிரித்து திருவள்ளூர் கிழக்கு என்று பெயரிடப்பட்டுள்ளது. இதற்காக மாவட்டச் செயலாளராக ஆர்கே நகரைச் சேர்ந்த ஆர்கே மணி என்பவரை நியமிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருவர் மனு அளிக்க முயற்சித்துள்ளனர். அதில், எங்கள் தொகுதியைச் சேர்ந்தவரை மட்டுமே மாவட்டச் செயலாளராக நியமிக்க வேண்டும்.
பல ஆண்டுகளாக நாங்கள் வேலை செய்துள்ளோம். அதனால் மாற்று தொகுதியைச் சேர்ந்தவரை மாவட்டச் செயலாளராக நியமிக்க கூடாது என்று கூறப்பட்டுள்ளது. காருக்கு அருகில் மனுவை நீட்டிய படி வந்த நிலையில், திடீரென விஜய் முன்னே செல்லுமாறு அறிவுறுத்தினார். இந்த சம்பவம் நிர்வாகிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications