திருவள்ளுர் தவெக நிர்வாகியும் தற்கொலை முயற்சி.. ஒன்றிய செயலாளர் மிரட்டலால் விபரீத முடிவு!
சென்னை: திருவள்ளூர் மாவட்ட தவெக நிர்வாகி சத்திய நாராயணன் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, பதவி விவகாரத்தில் தூத்துக்குடி மாவட்ட தவெக பெண் நிர்வாகி அஜிதா தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
திருவள்ளூர் மாவட்ட தவெக நிர்வாகியான சத்திய நாராயணன், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வாழ்த்து பேனர் ஒன்றை வைத்துள்ளார். அந்தப் பேனரில் பூண்டி ஒன்றிய செயலாளர் விஜய் பிரபுவின் புகைப்படம் இடம்பெறவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விஜய் பிரபு, சத்திய நாராயணனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கடுமையாக மிரட்டியதாகத் தெரிகிறது.

இதனால், மன உளைச்சல் அடைந்த சத்திய நாராயணன் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர் தற்போது திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தவெகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி வரும் சூழலில், தவெக தலைவர் விஜய், முதல் முறையாக சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கத் தயாராகி வருகிறார். இதனிடையே, தவெக கட்சிக்குள் எழுந்துள்ள அதிருப்தி, அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழத்தின் திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளர் மணிகண்டன் என்பவர் கடந்த 8 மாதங்களாக சரிவர கட்சிப் பணிகளை செய்யவில்லை என்றும், கட்சியில் பொறுப்பு வாங்கி தருவதாக பலரிடம் பணம் வசூலிப்பதாகவும் கூறி திருவேற்காடு, ஆவடி மாநகராட்சி, பட்டாபிராம், திருநின்றவூர் ஆகிய பகுதிகளில் இருந்து பெண்கள் உள்ளிட்ட சுமார் 100க்கும் மேற்பட்டோர் அண்மையில் பனையூரில் உள்ள தவெக கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், பிறந்தநாள் நிகழ்ச்சி ஒன்றில் கட்சியின் சார்பில் வைக்கப்பட்ட பேனரில் ஆதவ் அர்ஜுனாவின் புகைப்படம் பயன்படுத்தப்பட்டதாக கூறி, வட்டச் செயலாளர் பிரதீப் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, அவரை கட்சியிலிருந்து நீக்கியதாகவும் குற்றம்சாட்டி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, மாவட்ட செயலாளருக்கு எதிராக கையில் பதாகைகள், பேனர்களை பிடித்தபடி கோஷமிட்டனர். தவெக அலுவகத்திற்குள் அக்கட்சியினரே எதிர்ப்பு பேனர்களை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தவெக கட்சி அலுவலகத்தில யாரும் இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிறிது நேரத்தில் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் திருவள்ளூர் மாவட்ட தவெகவில் சலசலப்பு நிலவி வந்தது.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட தவெக நிர்வாகி சத்திய நாராயணன் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிறிஸ்துமஸ் வாழ்த்து பேனரில் பூண்டி ஒன்றிய செயலாளர் விஜய் பிரபுவின் புகைப்படம் இல்லாததால், அவர் சத்திய நாராயணனை தொடர்பு கொண்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சல் அடைந்த சத்திய நாராயணன் தற்கொலைக்கு முயன்று, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே, பதவி விவகாரத்தில் தூத்துக்குடி மாவட்ட தவெக பெண் நிர்வாகி அஜிதா ஆக்னஸ் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அஜிதா ஆக்னஸ் அண்மையில் பனையூரில் விஜய்யின் காரை மறிக்க முயன்ற நிலையில், அவரை தவெகவினர் சமூக வலைதளங்களில் விமர்சித்து வந்தனர்.
அஜிதா ஆக்னஸை சமூக வலைத்தளங்களில் தவெக தொண்டர்கள் சிலர் திமுக கைக்கூலி என விமர்சித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகவும், இதன் காரணமாக அளவுக்கதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சி மேற்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவரை மீட்ட குடும்பத்தினர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications