அண்ணா, எம்ஜிஆருக்கு நடுவில் விஜய்.. என்ன சொல்ல வருகிறார்? பாடல் வீடியோவில் இதை பார்த்தீங்களா
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை இன்று அறிமுகம் செய்த விஜய், கட்சி அலுவலகத்தில் கொடியை ஏற்றி வைத்தார். அதன்பிறகு கொடி பாடலும் வெளியிடப்பட்டது. இந்த பாடலில் இடம் பெற்றுள்ள பல்வேறு காட்சிகள் மிகுந்த கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக இரட்டை இலையை குறிக்கும் விதமாக இரண்டு விரல்களை காட்டியபடி எம்.ஜி.ஆர் நிற்கும் உருவம் பாடலில் இடம் பெற்றுள்ளது.
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் இன்று தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்தார். பனையூரில் உள்ள தவெக கட்சியின் அலுவலகத்தில் கொடி ஏற்றி வைத்து பேசிய விஜய், கொடிக்கான அர்த்தம் என்ன என்பதை விரைவில் நடைபெற இருக்கிற மாநாட்டில் சொல்வதாக கூறினார்.

வீடியோ பாடல்: தவெக கொடியில் கருஞ்சிவப்பு மஞ்சள் என இரு நிறங்களும் நடுவில் இரண்டு பிளிறும் யானைகளுக்கு நடுவில் வாகை மலர் இடம் பெற்றுள்ளது. கொடியை ஏற்றி வைத்த பிறகு கொடி பாடலும் வெளியிடப்பட்டது. வீடியோ வடிவில் வெளியிடப்பட்ட இந்த பாடலில் போர்க்களத்தில் யானை படைகளுடன் சண்டையிடுவது போன்ற காட்சிகள் தொடங்கியது.
எம்ஜிஆர் உடன் விஜய்: பாடலுக்கு இடையே அண்ணா- எம்.ஜி.ஆருக்கு இடையே விஜய் நிற்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. எம்.ஜி.ஆர் தனது கட்சியின் இரட்டை இலை சின்னத்தை காட்டும் விதமாக அதாவது இரட்டை விரல்களை காட்டும் படம் இடம் பெற்று இருக்கிறது. இருபெரும் அரசியல் தலைவர்களுக்கு நடுவே விஜய் நிற்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருப்பதன் மூலம் தனது அரசியல் பயணம் எப்படி இருக்கும் என்பதை விஜய் மறைமுகமாக சொல்ல வருகிறார் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.
திராவிட அரசியல்: திராவிட அரசியலின் முன்னோடியான அண்ணா மற்றும் அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர் ஆகியோரது உருவத்தை தனது கட்சி பாடலில் விஜய் இடம் பெற வைத்து இருப்பது திராவிட அரசியல் பாணியை பின்பற்றி தனது செயல்பாடுகள் இருக்கும் என்பதையே விஜய் சூசகமாக சொல்ல வருகிறார் என்பது அரசியல் விமர்சகர்கள் கருத்தாக உள்ளது. ஒருபக்கம் அண்ணா உருவம் என்றால் மற்றொரு பக்கம், எம்.ஜி..ஆர் இரட்டை இலை காட்டிய படி நிற்கும் காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது.
அதிமுக பிரச்சினை: இதன் மூலம் அதிமுகவில் எம்.ஜி.ஆர் விசுவாசிகளை கவரும் விதமாக விஜய் காய் நகர்த்தியிருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது. உட்கட்சி பூசல் அதிமுகவில் இன்னும் முழுமையாக ஓயாத நிலையில், விஜயின் இந்த நகர்வு மிகவும் கவனம் பெறும் ஒன்றாக அமைந்து இருக்கிறது.
விரைவில் விக்கிரவாண்டியில் தவெக மாநாடு நடைபெற இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த மாநாட்டில் விஜய் கட்சி கொடி பற்றி விவரமாக பேச உள்ளதாக கூறியிருக்கிறார். எனவே அப்போது, விஜயின் அரசியல் பாணி, அவர் முன்வைக்கும் கொள்கைகள் உள்ளிட்டவற்றிகு தெளிவான விடை கிடைக்கும் என்று தவெக நிர்வாகிகள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications