இதுதான் வாரிசு அரசியல்.. விஜய் உதவியாளர் மகனுக்கு மாவட்ட செயலாளர் பதவி.. சொன்ன வார்த்தை தவறிட்டாரே!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் சென்னை தெற்கு மேற்கு மாவட்டச் செயலாளராக அக்கட்சியின் தலைவர் விஜய்-ன் முன்னாள் ஓட்டுநராகவும், இந்நாள் உதவியாளருமான ராஜேந்திரனின் மகன் சபரிநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனால் தவெகவில் வாரிசு அரசியல் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அதேபோல் கட்சிக்காக உழைக்காதவர்களுக்கு பதவி அளிக்கப்பட்டுள்ளதாகவும் நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் 6ஆம் கட்ட மாவட்டச் செயலாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தவெக சார்பாக நிர்வாக வசதிக்காக மொத்தம் 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜனவரி மாத இறுதியில் மாவட்டச் செயலாளர்களுக்கான நேர்காணலை தவெக தலைவர் விஜய் நடத்தினார். அதன்படி ஒவ்வொரு கட்டமாக 19 மாவட்டச் செயலாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

இதுவரை 5 கட்டங்களாக மாவட்டச் செயலாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்தனர். அதன்படி 95 மாவட்டச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்ட நிலையில், தற்போது 6வது கட்டமாக மாவட்டச் செயலாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை தெற்கு மாவட்டச் செயலாளராக ஆர்.சபரிநாதன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இணைச் செயலாளராக கமால்தீன், பொருளாளராக ஜவஹர் நியமனம் செய்யப்பட்டனர்.
அதேபோல் துணைச் செயலாளராக வேல்முருகன் மற்றும் ஈஸ்வரி ஆகியோரும், செயற்குழு உறுப்பினர்களாக ராணி திருக்குமரன், ஜோதிலட்சம் உள்ளிட்ட 10 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் தெற்கு மாவட்டச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள ஆர்.சபரிநாதன் என்பவர் தவெக தலைவர் விஜய்-ன் உதவியாளர் ராஜேந்திரனின் மகனாவார்.
ராஜேந்திரன் விஜய்-ன் ஓட்டுநராக இருந்து உதவியாளராக உயர்ந்தவர். இவர் விஜய் உடன் 40 ஆண்டுகளாக தொடர்ந்து உடனிருந்து வருகிறார். ராஜேந்திரனின் மகன் சபரிநாதன் 21 வயதிலேயே விஜய் மக்கள் இயக்கத்தில் இணைந்தவர். அதன்பின் 6 ஆண்டுகளாக தொடர்ந்து மக்கள் இயக்கப் பணிகளை மேற்கொண்டு வந்திருக்கிறார்.
இதன் காரணமாகவே சபரிநாதனுக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விருகம்பாக்கம் தொகுதிக்கான மாவட்டச் செயலாளர் பதவிக்கு ஏராளமான போட்டிகள் இருந்தன. கடந்த 3 மாதங்களாகவே விருகம்பாக்கம் தொகுதி நிர்வாகிகளிடையே பிரச்சனைகள் இருந்து வந்தன. இதற்காக அவர்களுடன் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி இருக்கிறார்.
இந்த நிலையில் அனைத்து பிரச்சனைகளையும் முடித்து சபரிநாதனுக்கு பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. 27 வயதிலேயே அவருக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு அளிக்கப்பட்டிருப்பது அக்கட்சி நிர்வாகிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அவர் பதவிக்காகவே கட்சியில் சேர்ந்ததாக கூறப்பட்டு வந்தது.
கட்சிக்கு உழைத்தவர்களை விட்டுவிட்டு உழைக்காதவர்களுக்கு வாரிசு அடிப்படையில் பதவி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். விக்கிரவாண்டியில் நடந்த தவெக மாநாடு மேடையில் வாரிசு அரசியலுக்கு எதிராக கொந்தளித்த விஜய், தற்போது தன்னுடன் பயணித்த மேலாளரின் மகனுக்கு பதவி கொடுத்திருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications