"அண்ணன் வரார் வழிவிடுங்க".. மதுரை தவெக மாநாட்டுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த காவல் துறை
சென்னை: தவெக இரண்டாம் மாநாடு மதுரையில் வருகிற ஆகஸ்ட் 21 ஆம் தேதி நடத்தப்படும் என்று அக்கட்சி தலைவர் அறிவித்திருந்தார். தேதி மாற்றம், காவல்துறை கெடுபிடிகள் உள்ளிட்ட காரணங்களால் இழுபறி இருந்து வந்தது. இந்நிலையில் மதுரை தவெக மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளதாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் தவெக மூலம் அரசியல் களத்துக்கு வந்து 2வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். அந்தக் கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் விக்கிரவாண்டியில் கடந்தாண்டு நடைபெற்றது. அந்த மாநாடு நடைபெற்ற பிறகு விஜய் மீண்டும் திரைப்பட பணிகளில் மூழ்கிவிட்டார். மிகவும் அரிதாகவே அரசியல் களத்தில் தலை காட்டினார்.

தற்போது அவரின் கடைசி படமான ஜனநாயகன் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. விரைவில் 2026 சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியாகவுள்ளது. இந்நிலையில் தவெக கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு ஆகஸ்ட் 25 ஆம் தேதி மதுரையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி அருகே உள்ள பாரபத்தி பகுதியில் மாநாடு நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் அன்றைய தினம் விநாயகர் சதுர்த்தி பண்டிகை இருப்பதால், காவல்துறை பாதுகாப்பை காரணம் காட்டி மாநாட்டு தேதியை ஆகஸ்ட் 21 ஆம் தேதிக்கு மாற்றி விஜய் அறிவித்திருந்தார்.
தற்போது ஆகஸ்ட் 21 ஆம் தேதி மாநாடு நடத்துவதற்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளதாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
முன்னதாக புஸ்ஸி ஆனந்த் சார்பில், தவெக மாநாட்டுக்கு அனுமதி கேட்டு திருமங்கலம் காவல்துறையிடம் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி மனு வழங்கப்பட்டிருந்தது.
காவல்துறையினர் இடம், பங்கேற்கும் நபர்கள், உணவு, குடிநீர், போக்குவரத்து, வாகனம் நிறுத்தும் வசதி, சிசிடிவி கேமரா வசதி உள்ளிட்ட 42 கேள்விகளை தவெகவிடம் கேட்டிருந்தனர். இதற்கான பதில்களை தவெக சார்பில் எழுத்துபூர்வமாக வழங்கப்பட்டிருந்தது. இதையடுத்து காவல்துறை மாநாட்டிற்கு அனுமதி வழங்கியுள்ளதாக ஆனந்த் கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த புஸ்ஸி ஆனந்த், "21 ஆம் தேதி மதுரையில் தவெக மாநாடு நடத்த காவல்துறை அனுமதி வழங்கியுள்ளனர். தவெக தலைவர் விஜய் அறிவுறுத்தல்படி எல்லா ஏற்பாடுகளையும் நாங்கள் செய்து வருகிறோம். தலைவர் அறிவித்தபடி ஆகஸ்ட் 21 மாலை 4 மணியளவில் மாநாடு திட்டமிட்டபடி நடைபெறும்." என்றார்.












Click it and Unblock the Notifications