அன்று “பேர் சொல்லக்கூடிய குடும்பம்”.. இன்று “சுயநல குடும்பமே நம் எதிரி”.. வைரலாகும் விஜய் பேச்சு!
சென்னை: தவெக தலைவர் விஜய், முன்னாள் முதல்வர் கருணாநிதி குடும்பத்தை புகழ்ந்து முன்பு பேசிய வீடியோவை பகிர்ந்து, இன்று விஜய் தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பேசியதோடு ஒப்பிட்டு பலரும் பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று விக்கிரவாண்டி அருகே நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய் தனது பேச்சில் பாஜகவையும் திமுகவையும் கடுமையாக விமர்சித்தார். பிளவுவாத அரசியல் செய்பவர்கள் கொள்கை எதிரி என்றும், திராவிட மாடல் என ஏமாற்றும் குடும்பக் கட்சி அரசியல் எதிரி என்றும் பேசினார் விஜய்.

திமுகவை காட்டமாக விமர்சித்த விஜய்: விஜய் பேசும்போது, "சமதர்ம கொள்கையை கையில் எடுத்தவுடன் இங்கு கொஞ்சம் கதறல் சத்தம் கேட்டது. அது இனி இன்னும் சத்தமாக கேட்கும். பிளவுவாத சித்தாந்தம் மட்டுமே நமக்கு எதிரியா? ஊழல் மலிந்த கலாச்சாரத்தை ஒழித்தாக வேண்டும். பிளவுவாத சக்திகளை எளிதில் கண்டுபிடித்து விடலாம். ஆனால் ஊழலை கண்டுபிடிக்கவே முடியாது. அது கருத்தியல் பேசி கொள்கை நாடகம் போடும். அந்த கபடவேடதாரிகள்தான் இப்போது நம்மை ஆண்டு கொண்டுள்ளனர்.
அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு எதிரிகளை அடிபணிய வைக்கும் கூட்டம் நாம் அல்ல. ஏ டீம், பி டீம் என பொய்ப் பிரச்சாரம் செய்து வீழ்த்த முடியாது. உலகம் முழுவதும் நம் வகையறா உள்ளனர். நம் எதிரிகளை ஜனநாயக ரீதியில் 2026-ம் ஆண்டு தேர்தலில் ஒற்றை விரலில் அழுத்தும் வாக்குகள் அணுகுண்டாக விழும். யார் அரசியலுக்கு வந்தாலும் ஒரு குறிப்பிட்ட வண்ணத்தை அவர்கள் மேல் பூசி விடுகிறார்கள். ஆனால் இவர்கள் தேர்தல் நேரத்தில் அறிக்கை விட்டுவிட்டு, பாசிசம் பாசிசம் என்று கூறுகிறார்கள். அவர்கள் பாசிசம் என்றால் நீங்கள் என்ன பாயாசமா?
வைரலாகும் வீடியோ: மக்கள் விரோத ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என்று ஏமாற்றுகிறார்கள். எங்கள் கட்சி வண்ணத்தை தவிர வேறு வண்ணத்தை பூச முடியாது. திராவிட மாடல் எனச் சொல்லிகொண்டு, பெரியார், அண்ணா பேரை வைத்து, தமிழ்நாட்டை சுரண்டி கொள்ளை அடிக்கும் குடும்ப சுயநல கூட்டம் தான் நம் அரசியல் எதிரி. திராவிடத்தையும், தமிழ் தேசியத்தையும் பிரித்து பார்க்கப் போவதில்லை. மதசார்ப்பற்ற சமூக நீதி கொள்கையை முன்னிருத்தி செயல்பட உள்ளோம்." என்று பேசினார் விஜய்.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய் முன்பு பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஜெய் நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான கனிமொழி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய வீடியோவை பலரும் பகிர்ந்து விஜய் பேச்சை ஒப்பிட்டு விமர்சித்து வருகின்றனர்.
விஜய் முன்பு பேசியது என்ன?: அதில் விஜய், "உதயநிதி, தயாநிதி, அருள்நிதி, தமிழரசு, கனிமொழி. இந்த மாதிரி பெயர்களை கேட்கும்போதே இதெல்லாம் படத்துக்கு டைட்டிலா வைக்கணும்னு எனக்கு தோனும். அந்த அளவுக்கு ரொம்ப பவர்ஃபுல்லான பெயர்கள். ரொம்ப அழகான பெயர்கள். இந்தியாவிலேயே பரம்பரை பரம்பரையா பெயர் சொல்லக்கூடிய ஒரு குடும்பம்னா அது ஜவஹர்லால் நேரு அவர்களுடைய குடும்பம் தான். அதற்கப்புறம் தமிழ்நாட்டில் பெயர் சொல்லக் கூடிய ஒரு குடும்பம்னா அது கலைஞர் ஐயா அவர்களின் குடும்பம் தான்" எனப் பேசியிருந்தார்.












Click it and Unblock the Notifications