எடப்பாடி பழனிசாமியின் கூட்டணி அழைப்புக்கு தவெக கொடுத்த உடனடி பதில்! ஒரே கண்டிஷன் தானாம்!
சென்னை: திமுக ஆட்சியை அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணையலாம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று பேசிய நிலையில், "எங்கள் தலைவர் விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொள்பவர்களுடன் மட்டுமே கூட்டணி. எங்கள் அரசியல் எதிரியுடனும், கொள்கை எதிரி உடனும் கூட்டணி கிடையாது" என தவெக தரப்பு பதில் அளித்துள்ளது.
2026 சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக களப்பணி ஆற்றி வருகின்றன. இதற்கிடையே, கூட்டணியை உறுதி செய்வதிலும் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. புதிதாக அரசியல் களத்துக்கு வந்துள்ள விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் எப்படிப்பட்ட கூட்டணியை அமைக்கப்போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

அதிமுக கூட்டணியில் தவெக இணையக்கூடும் என முன்பு பேச்சுகள் உலவின. ஆனால், அதிமுக பாஜக உடன் கூட்டணி அமைத்த நிலையில் இந்த பேச்சுகள் சற்று அடங்கி இருந்தன. எனினும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தவெக-வை கூட்டணிக்கு அழைப்பது போலவே பேசி வந்தார். அதிமுக - பாஜக கூட்டணியில் தவெகவும் இணையக்கூடுமோ என்ற யூகங்கள் எழுந்தன.
இந்நிலையில், சேலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "திமுக ஆட்சியை அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணையலாம். இதுதான் திமுக ஆட்சியின் கடைசி ஆண்டு இதற்கு மேல் திமுகவால் ஆட்சிக்கு வரமுடியாது. தவெக தங்கள் கூட்டணிக்கு வர வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறியது அவரது தனிபட்ட கருத்து." எனக் கூறினார்.
திமுக ஆட்சியை அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணையலாம் என எடப்பாடி பழனிசாமி கூறியது, தவெகவுக்கு மறைமுக அழைப்பு என்ற கருத்துகள் அரசியல் அரங்கில் எழுந்தன. இதற்கு தவெக இணை பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் உடனடியாக பதில் கொடுத்துள்ளார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய சிடிஆர் நிர்மல்குமார், "பொதுக்குழு கூட்டத்தில் தான் எடப்பாடி பழனிசாமி ஒரு கணக்கெல்லாம் சொன்னார். இந்த ஒரு வாரத்தில் அந்த கணக்கில் எல்லாம் நம்பிக்கை இழந்துவிட்டாரா எனத் தெரியவில்லை. கட்சியின் நிலைமையை அவர் மீண்டும் மறுவரையறை செய்யவேண்டும். எங்கள் தலைவர் விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொள்பவர்களுடன் மட்டுமே கூட்டணி. எங்கள் அரசியல் எதிரியுடனும், கொள்கை எதிரி உடனும் கூட்டணி கிடையாது என திட்டவட்டமாகச் சொல்லிவிட்டோம். இதை எடப்பாடி பழனிசாமி ஏற்கும் சூழலில் தான் கூட்டணி பற்றி யோசிக்க முடியும்" எனத் தெரிவித்துள்ளார்.
தவெக தூய கட்சி அல்ல, கலப்பட கட்சி என அதிமுக முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி விமர்சித்தது பற்றிய கேள்விக்கு பதில் அளித்துப் பேசிய சிடிஆர் நிர்மல்குமார், "எங்கள் தலைவர் விஜய் திமுகவை தீய சக்தி என கடுமையாக பேசியதற்கு அதிமுகவை சேர்ந்தவர்கள் பதில் சொல்வது வேடிக்கையாக உள்ளது. திமுகவும் அதிமுகவும் அரசியல் பங்காளிகளாக இருப்பது இப்போது வெட்ட வெளிச்சமாகி உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications