நீண்டகால சிறைவாசம்... 7 தமிழர், இஸ்லாமிய சிறை கைதிகளை விடுதலை செய்ய வேல்முருகன் வலியுறுத்தல்
சென்னை: ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு மற்றும் வேறு வழக்குகளில் நீண்டகாலம் சிறைவாசம் அனுபவித்து வரும் 7 தமிழர்கள் மற்றும் இஸ்லாமிய சிறை கைதிகளை தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக வேல்முருகன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்தின், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய ஏழு பேரும் கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடி வருகின்றனர்.
7 தமிழர் விடுதலை- முதல்வர் விரைவில் ஆலோசனை நடத்தி நல்ல முடிவை அறிவிப்பார்: அமைச்சர் ரகுபதி
7 தமிழர் விடுதலைக்கான போராட்டம்
இந்த ஏழு பேரையும் விடுதலை செய்ய கோரி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், தோழமை இயக்கங்களும் தொடர்ச்சியாக குரல் எழுப்பி வருகின்றன. இவர்களது விடுதலைக்காக பல்வேறு ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றன.
அற்புதம்மாள் போராட்டம்
குறிப்பாக 19 வயதில் கைது செய்யப்பட்ட பேரறிவாளனுக்கு, தற்போது வயது 45 கடந்துவிட்டது. தனது இளமைப் பருவத்தை சிறையிலேயே கழித்து விட்டார். அதுவும் 16 ஆண்டுகளை தனிமை சிறையில் கழித்துள்ளார். இப்போது கடைசி காலத்திலாவது, தன் மகன் பேரறிவாளன் தங்களோடு சேர்ந்து வாழவேண்டும் என அற்புதம்மாள் தொடர்ச்சியாக போராடி வருகிறார்.
தமிழக அரசு முடிவு
இச்சூழலில்தான், உச்ச நீதிமன்றம் 2018 செப்டம்பர் 6ஆம் தேதி "அரசியலமைப்பு சாசனம் பரிவு 161ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுக்கலாம் எனத் தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு, சட்டமன்றப் பேரவையில் 2018 செப்டம்பர் 9ஆம் தேதி "பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர்களையும் விடுதலை செய்ய வேண்டும்" என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், ஆளுநர் சட்டமன்றத் தீர்மானத்தை ஏற்காமல், பொருத்தமற்ற காரணங்களை கூறி காலதாமதப்படுத்தி வருகிறார்.
ஆளுநரின் தாமதம்
மேலும், உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் எவ்வித முடிவும் எடுக்காமல், காலம் தாழ்த்தி வருகிறார்.
7 தமிழர், இஸ்லாமிய சிறை கைதிகள்
எனவே, இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தலையிட்டு, ஏழு பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி வலியுறுத்துகிறது. அதோடு, கோவை மற்றும் பல்வேறு சிறைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் இஸ்லாமியர்களையும் விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. இவ்வாறு பண்ருட்டி தி. வேல்முருகன் எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத்துள்ளார்.