"தீர்மானமும் வேண்டாம்.. தர்மசங்கடமும் வேண்டாம்.. " அமைச்சர் பதவி குறித்து உதயநிதி பரபர அறிக்கை
சென்னை: உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்று பல்வேறு மாவட்டங்களில் திமுகவினர் தீர்மானம் நிறைவேற்றி உள்ள நிலையில், இது தொடர்பாக உதயநிதி முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
திண்டுக்கல் தி.மு.க கிழக்கு, மேற்கு மாவட்டத்தின் சார்பாகத் திண்டுக்கல் கலைஞர் அரங்கில் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானங்கள்
முன்னதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் நடைபெற்ற திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்திலும் உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், சில இடங்களிலும் இதேபோல உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகத் தகவல் வெளியானது. இந்தச் சூழலில் இதுபோன்ற தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டாம் என்று உதயநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

உதயநிதி
இது குறித்து உதயநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருச்சி, திண்டுக்கல், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற கழக செயல்வீரர்கள் கூட்டங்களில் எனக்கு அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்பட வேண்டும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு தலைமைக் கழகத்திற்கு அனுப்பிவைத்திருப்பது குறித்து அறிந்தேன். என் தொடர் பணிகள் மீதும், முன்னெடுப்புகள் மீதும் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும், அன்பிற்கும் நான் என்றென்றும் நன்றிக்குரியவனாக இருப்பேன்.

அடுத்தகட்ட பணிகள்
கழகம் வழங்கிய வாய்ப்பில், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராகத் தொகுதி மக்களின் தேவைகளைக் கேட்டறிந்து, அதற்குரிய தீர்வுகளுக்கான மக்கள் பணியையும், கழகத் தலைவர் மற்றும் கழக முன்னோடிகளின் வழிகாட்டுதலில் கழக இளைஞர் அணியின் செயலாளராகத் தமிழகம் முழுவதும் பயணித்து, சுழகப் பணியையும் என்னால் இயன்றவரைச் சிறப்பாக ஆற்றி வருகிறேன். கழகத்தை இளைஞர்களிடம் கொண்டுசேர்க்க அடுத்தகட்ட திட்டமிடல்களுடன் பாசறைக் கூட்டங்கள் நடத்துவது, நலத்திட்ட பணிகளில் ஈடுபடுவதென பலவற்றுக்குமான பயணங்களுக்குத் தயாராகி வருகிறேன்.

தர்மசங்கடம்
இந்தச் சூழலில், என் மீதுள்ள அன்பின் காரணமாக, 'எனக்கு அமைச்சர் பொறுப்பு அளிக்கத் தீர்மானம் நிறைவேற்றி, தலைமைக்கு இனி யாரும் தர்மசங்கடத்தை உருவாக்கிட வேண்டாமென உங்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். எந்தச் சூழலில் எந்த முடிவை எடுக்க வேண்டும் என்பதைக் கழகமும் தலைமையும் நன்கறியும் என்பதைக் கழக உடன்பிறப்புகள் நாம் அனைவரும் அறிவோம்.

உழைப்போம்
எனவே, பெரியார், அண்ணா, கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் வழியில் வந்த நம் கழகத் தலைவர் வழங்கும் கட்டளையின் வழியில் நின்று கழகத்தை வளர்த்தெடுக்க நாளும் தொடர்ந்து உழைத்திடுவோம்! மக்கள் பணியாற்றிடுவோம்! கழகத்துக்கும் கழக அரசுக்கும் மகத்தான புகழைச் சேர்த்திடுவோம்" என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications