'அப்பா ஸ்டைலில் மகன்..' ரைன்கோட் மாட்டிக்கொண்டு களத்தில் இறங்கி..வெள்ள பாதிப்பை ஆய்வு செய்த உதயநிதி
சென்னை: சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ள நிலையில், , சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டசபை உறுப்பினராக உதயநிதி அவரது தொகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ள நீர் பாதிப்புகள் குறித்துப் பார்வையிட்டார். மேலும், வெள்ள பாதிப்புகளும் குறித்தும் அவர் பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.
வடகிழக்கு பருவமழை காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட 6 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அதிதீவிர கனமழை கொட்டி தீர்க்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாகத் தலைநகர் சென்னையில் நேற்று மாலை தொடங்கிய கனமழை, தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் சென்னைக்கு ரெட் அலர்டு கொடுக்கப்பட்டுள்ளது.

கனமழை
தாம்பரம், வேளச்சேரி, எழும்பூர், வடபழனி, சைதாப்பேட்டை, கிண்டி என நகரின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று மாலை தொடங்கி கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் தலைநகர் சென்னையில் பல பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. மழைநீரை மோட்டர் கொண்டு வெளியேற்றும் பணிகள் ஒரு புறம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதேநேரம் மறுபுறம் கங்கு ரெட்டி சுரங்கப்பாதை துரைசாமி சுரங்கப்பாதை, கணேசபுரம் சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை உள்ளிட்ட 7 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன.

உதவி எண்கள்
தலைநகரில் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலையில் விழுந்து கிடக்கும் மரணங்களை அகற்றும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனால் சென்னைவாசிகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், வெள்ள பாதிப்பு உதவிகளைப் பெற 1913, 04425619206, 04425619207, 04425619208 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம் எனச் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

முதல்வர் ஆய்வு
இந்தச் சூழலில் முதல்வர் ஸ்டாலின் வட சென்னை பகுதிகளில் வெள்ள நீர் பாதிப்புகள் குறித்தும் மீட்புப் பணிகள் குறித்தும் இன்று காலை ஆய்வு செய்தார். காலை 10.30 மணியளவில் முதலில் எழும்பூரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின், அதன் பிறகு வடசென்னையில் அனைத்து பகுதிகளிலும் ஆய்வு செய்தார். அப்போது மீட்புப் பணிகள் குறித்தும், வெள்ள நீரை வெளியேற்ற எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளையும் அளித்தார்.

சிவப்பு ஜீப்
சிவப்பு ஜீப் ஒன்றில் ரெயின்கோட் அணிந்தபடி முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது அமைச்சர்கள் கே.என் நேரு, சேகர்பாபு சென்னை மாநகராட்சி ஆணையர், தலைமைச் செயலாளர் உடன் இருந்தனர். தீபாவளிக்கு ஊருக்குச் சென்றவர்கள் 2 அல்லது 3 நாட்கள் கழித்து சென்னை திரும்புமாறு கேட்டுக்கொண்ட முதல்வர் ஸ்டாலின், தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதால் பாதிப்புகள் எதுவும் ஏற்படாது என உறுதி அளித்தார்.

உதயநிதி ஆய்வு
இந்தச் சூழலில், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டசபை உறுப்பினராக உதயநிதி அவரது தொகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ள நீர் பாதிப்புகள் குறித்துப் பார்வையிட்டார். மழைநீர் சூழ்ந்து வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமல் தவிக்கும் மக்களுக்கு வீடுவீடாக சென்று மதிய உணவுகளையும் வழங்கினார். மேலும், வெள்ள பாதிப்புகளும் குறித்தும் அவர் பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

தந்தையைப் போலவே
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "#ChepaukTriplicane தொகுதி 114அ வட்டம் லாக் நகர் கிளிமரம் பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை கால்வாயில் வடியவைக்கும் பணிகளை ஆய்வு செய்தோம். நீர் மெதுவாக வடிவதால் எந்திரங்கள் மூலம் நீரை உறிஞ்சி நீர்நிலைகளில் விடும் பணியைக் கழகத்தினர்-மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து மேற்கொண்டோம்." என பதிவிட்டுள்ளார். வெள்ளம் பாதிப்புகளைத் தந்தை போலவே ரெயின்கோட் அணிந்தபடி களத்தில் இறங்கி ஆய்வு செய்த உதயநிதியின் படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரி
கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் தற்போது செம்பரம்பக்கம் ஏரியில் இருந்து 1000 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது. ஏற்கனவே, கடந்த 2015இல் செம்பரம்பக்கம் ஏரியில் திறந்துவிட்ட உடன் தான் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டது. அதேபோன்ற நிகழ்வு மீண்டும் நடந்துவிடுமோ எனச் சென்னைவாசிகள் அச்சத்தில் உள்ளனர். இந்தச் சூழலில் முதல்வர் உட்பட பல்வேறு அமைச்சர்களும் களத்தில் இறங்கியுள்ளது பொதுமக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications