முரசொலி மட்டுமில்லை.. எந்த பத்திரிகையிலும் ஒரு துண்டு விளம்பரம் கூட வரக் கூடாது.. உதயநிதி ஆர்டர்?
சென்னை: தன்னை வாழ்த்தி முரசொலியில் மட்டும் அல்லாமல் வேறு எந்த பத்திரிகையிலும் ஒரு துண்டு விளம்பரம் கூட வரக் கூடாது என உதயநிதி ஸ்டாலின் கண்டிப்பாக சொல்லிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுக இளைஞரணிச் செயலாளரும் சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பொறுப்பேற்றார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றார். தமிழக சட்டசபையில் உள்ள மொத்த இடங்களில் 15 சதவீத அமைச்சர்களை நியமித்து கொள்ளலாம்.

34 பேர்
அந்த வகையில் முதல்வருடன் சேர்த்து 34 பேர் அமைச்சர்களாக உள்ளனர். இந்த நிலையில் ஒரு இடம் காலியாக இருந்து வந்தது. உதயநிதி எப்போது அமைச்சர் ஆவார் என திமுக நிர்வாகிகள் எதிர்பார்த்து காத்திருந்தார்கள். மேலும் அவர் கையில் 3 படங்கள் வேறு இருக்கிறது.

உதயநிதி அமைச்சர்
அந்த வகையில் உதயநிதியை அமைச்சராக்கி வாரிசு அரசியல் என்ற ஒரு விமர்சனம் எழுவதற்கு முதல்வர் ஸ்டாலின் இடம் கொடுக்க மாட்டார் என சொல்லப்பட்டது. ஆனால் மூத்த நிர்வாகிகள், மூத்த அமைச்சர்கள் உள்ளிட்டோரின் நெருக்கடிகள் காரணமாக உதயநிதியை அமைச்சராக்க முதல்வர் ஸ்டாலின் பரிந்துரைத்தார்.

அமைச்சராக பதவியேற்றார்
அந்த வகையில் இன்றைய தினம் அவர் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். இந்த தருணத்திற்காக ஏராளமானோர் காத்திருந்தனர். உதயநிதி அமைச்சராவதை அடுத்து தமிழகத்தின் பல்வேறு அமைச்சர்களும் முன்னணி நாளிதழ்களை தொடர்பு கொண்டு முதல் பக்கத்தை தங்களது வாழ்த்து விளம்பரத்திற்கு ஒதுக்குமாறு பதிவு செய்து வைத்திருந்தனராம்.

விளம்பரங்கள்
ஆனால் விளம்பரங்கள் எதையும் கொடுக்கக் கூடாதுனு கட்சித் தலைமை சொல்லிவிட்டதால் விளம்பரங்களை கொடுக்க வில்லை, எனவே அதற்கான ஒதுக்கிய இடங்களை ரத்து செய்து விடுங்கள் என அமைச்சர்கள் தரப்பில் கூறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மற்ற நாளிதழ்களில்தான் விளம்பரம் கொடுக்க முடியவில்லை, முரசொலியில் கொடுக்கலாம் என பலரும் நினைத்திருந்தனர்.

முரசொலிக்கு போன்
இதற்காக முரசொலிக்கு போன் செய்த போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. உதயநிதி ஆசிரியராக உள்ள முரசொலியில் கூட எந்த விளம்பரமும் தன்னை வாழ்த்தி வரக் கூடாது என உதயநிதியே சொல்லிவிட்டதாக முரசொலி அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனால் ஒரு சிலர் முரசொலியில் உதயநிதியை வாழ்த்தி அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

முரசொலியின் ஆசிரியர்
இன்று வெளியான முரசொலியில் உதயநிதி இன்று அமைச்சராகிறார் என செய்தி வெளியானதே தவிர அவர் குறித்த வேறு எந்த விளம்பரமும் வரவில்லை. மேலும் 9ஆம் பக்கத்தில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பேராசிரியர் நூற்றாண்டு விழா விளம்பரம் மட்டுமே வெளியாகியுள்ளன. 10 -ஆம் பக்கமாக கடைசி பக்கத்தில் கூட கால் பக்கம் கூட முரசொலியில் விளம்பரம் வரவில்லை.












Click it and Unblock the Notifications