விஜய் கண் முன் தடாலடி சம்பவம்! சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்.. கடுமையான ரூட்டை எடுத்த உதயநிதி
சென்னை: முதல்வர் விஜய் முன் இன்று திமுக உதயநிதி ஸ்டாலின் பேசிய விஷயங்கள் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளன. முக்கியமாக உதயநிதி ஸ்டாலின் கூறிய சில விஷயங்கள் விவாதம் ஆகி உள்ளது.
இன்று சட்டசபையில் பேசிய எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், நடந்து முடிந்த தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை ஆளும் கட்சிக்கு மக்கள் வழங்கவில்லை. இருந்தாலும்.. நம்முடைய திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையில் மக்களை சந்தித்து வென்ற கட்சிகளின் தயவுடன் ஆட்சிக்கு வந்திருக்கும் முதல்வருக்கு வாழ்த்துக்கள். முதல்வரும் நானும் ஒரே கல்லூரியில் படித்தோம். அவர்களுக்கு வாழ்த்துக்கள். பேரவை தலைவர் அவர்களுக்கும்.. பேரவை துணை தலைவர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். வண்டிக்கு பிரேக் மாதிரி.. காளைக்கு மூக்கணாங்கயிறு மாதிரி நாங்கள் ஆட்சியை வழிநடத்துவோம்.
வெல்க தமிழ்.. வாழ்க தமிழ்நாடு.. முக்கியமாக மக்களை பிரிக்கும் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கடுமையாக குறிப்பிட்டு உள்ளார்.

உதயநிதி ஸ்டாலின்
முன்னாள் துணை முதலமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை கடுமையாக எதிர்த்து பேசி இருந்தார். இந்த விவகாரத்தின் வேர் 2023 செப்டம்பரில் சென்னையில் நடைபெற்ற "சனாதன ஒழிப்பு மாநாட்டில்" உள்ளது. அங்கு பேசிய உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை மலேரியா, டெங்கு மற்றும் கொரோனா போன்ற நோய்களுடன் ஒப்பிட்டு, அதை எதிர்க்கக்கூடாது, மாறாக "ஒழிக்க வேண்டும்" என்று பேசினார். இது சாதிய பாகுபாடுகளுக்கு எதிரான ஒரு விமர்சனம் என்று அவர் தரப்பில் வாதிடப்பட்டாலும், தேசிய அளவில் இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்பு, 2026 ஜனவரியில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய ஒரு கருத்து, இந்த நெருப்பை மீண்டும் மூட்டியது. உதயநிதியின் பேச்சு "வெறுப்புப் பேச்சு" (Hate Speech) என்று குறிப்பிட்ட நீதிமன்றம், ஒரு மத நம்பிக்கையை நோய்களுடன் ஒப்பிடுவது அம்மதத்தைப் பின்பற்றுபவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் செயல் என்று சுட்டிக்காட்டியது. "சனாதன ஒழிப்பு" என்பது கலாச்சார ரீதியான ஒழிப்பாகக் கருதப்படக்கூடும் என்றும் நீதிமன்றம் கவலை தெரிவித்தது. இது தேர்தல் பிரச்சாரத்தின் போது எதிர்க்கட்சிகளுக்கு மிகப்பெரிய ஆயுதமாக அமைந்தது.
பாடகர் கிரிஷின் விமர்சனமும் 'கர்மா' விவாதமும்
தேர்தல் முடிவுகளில் திமுக பின்னடைவைச் சந்தித்த நிலையில், பாடகர் கிரிஷ் சமூக வலைதளங்களில் வெளியிட்ட வீடியோக்கள் பெரும் வைரலாகி வருகின்றன. திமுகவின் தோல்விக்கு உதயநிதியின் சனாதனப் பேச்சே முக்கியக் காரணம் என்று அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் தடாலடி
தனது 'X' தளம் மற்றும் யூடியூப் வீடியோக்களில், "சனாதனத்தைத் தொட்ட... நீ கெட்ட" என்ற வாசகத்தைப் பயன்படுத்தி உதயநிதியை கிரிஷ் விமர்சித்துள்ளார். "சனாதனத்தை ஒழிக்க நினைப்பவர்கள் தாங்களே ஒழிந்து போவார்கள்" என்ற தொனியில் அவர் பதிவிட்ட கருத்துக்கள், கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது.
இப்படிப்பட்ட நிலையில்தான் தோல்வியோ.. வெற்றியோ.. நாங்கள் ஒருபோதும் கொள்கையில் இருந்து பின்வாங்க மாட்டோம் என்று சொல்லும் வகையில் வெல்க தமிழ்.. வாழ்க தமிழ்நாடு.. முக்கியமாக மக்களை பிரிக்கும் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கடுமையாக குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications