சேப்பாக்கம் நடமாடும் கலைஞர் நூலகத்தில் இவ்வளவு வசதிகளா?... அசந்து போய் எழுதிய எழுத்தாளர்
சென்னை: நூலகத்தையும் திமுகவையும் பிரிக்கவே முடியாது. திமுக ஆட்சியிலிருந்தபோது சென்னையில் 'அண்ணா நூற்றாண்டு' நூலகத்தைக் கட்டி எழுப்பி சாதனைப் படைத்தார் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி. அவரைத்தொடர்ந்து மதுரையில் 'கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை' முதல்வர் ஸ்டாலின் கட்டி எழுப்பி வருகிறார்.

30 லட்சத்தில் ஒரு நடமாடும் நூலகம்:
இந்த இருவரின் வரிசையில் இப்போது அடுத்தகட்டமாக நவீனமயமான நடமாடும் கலைஞர் நூலகம் ஒன்றை சேப்பாக்கத்தில் தொகுதி மக்கள் பயன்பெறும் வகையில் ரூ. 30 லட்சம் செலவில் திறந்துவைத்துள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

இந்த நடமாடும் நூலகத்தில் அரசியல், இலக்கியம், வரலாறு, திராவிட இயக்க நூல்கள், போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள், பொருளாதாரம், சுற்றுச்சூழல், கதை, கட்டுரை என ஏறக்குறைய 21 தலைப்புகளில் நூல்கள் பகுக்கப்பட்டுள்ளன. சுமார் 1500 நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நூலகத்தின் கண்காணிப்பாளர் சுதாகர், "நகரமயமாக்கப்பட்டுள்ள இன்றைய காலத்தில் பலர் நூலகங்களுக்குச் சென்று புத்தகங்களை வாசிப்பதில்லை. ஆகவேதான் இதைப்போன்ற நடமாடும் நூலகங்கள் தேவைப்படுகின்றன. அதைச் சரியாகப் புரிந்து கொண்டுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

எங்கள் வாகனம் கடந்த 4 வாரங்களாகச் சுறுசுறுப்புடன் இயங்கி வருகிறது. செல்லும் இடம் எல்லாம் குழந்தைகள், பெண்கள், தாய்மார்கள், அரசியல் ஆர்வலர்கள், மாணவர்கள் என வகைவகையான பொதுமக்கள் வந்து நூலகத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள். சுமார் 150க்கும் மேற்பட்டவர்கள் இதுவரை வருகை தந்துள்ளனர்.
7 நாட்கள்.. 7 தெருக்கள்.. நகர் வலம்:

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் மொத்தமாக 7 வார்டுகள் உள்ளன. அதில் முறைவைத்து ஒருநாளைக்கு ஒரு வார்டு என இந்த நடமாடும் நூலகம் பகுதி பகுதியாகப் பிரித்துப் பணி செய்து வருகிறது. அதாவது மாலை 4 மணி முதல் இரவு 7:30 மணி வரை மக்கள் குழுமும் இடங்களில் இந்தக் கலைஞர் நூலகம் சுறுசுறுப்பாகச் சுற்றி வருகிறது.
இப்படி தங்களின் வீடு தேடிவரும் இந்த நூலகத்திலிருந்து தேவையான நூல்களைப் பொதுமக்கள் எடுத்துக் கொள்ளலாம். அந்தப் புத்தகங்களை 2 வாரங்கள் வரை வைத்துப் படித்துவிட்டு, திரும்ப ஒப்படைத்துவிடலாம்.

இது குறித்துப் பேசிய மாணவி ஒருவர், "முதன்முறையாக ஒரு புத்தகம் எடுத்திருக்கிறேன். ஒருவாரத்தில் ஒப்படைக்கச் சொல்லி இருக்கிறார்கள். எனக்கான படிவத்தைப் பூர்த்தி செய்து கொடுத்துள்ளேன். விரைவில் அடையாள அட்டை தருவதாகச் சொன்னார்கள். மிகுந்த உற்சாகமாக இருக்கிறது. இந்த நூலகம் என் வீட்டுக்கே வருகிறது. ஆகவே அதிக சந்தோஷம் உண்டாகிறது" என்கிறார்
ஏன் இந்த நடமாடும் நூலகம் தேவை?
இந்த நூலகம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "தமிழ்நாடு முழுக்க நான் எங்குச் சென்றாலும் அனைவரும் என்னை 'சேப்பாக்கத்தின் செல்லப் பிள்ளை' என்றுதான் அழைக்கிறார்கள். அப்படி என்னுடன் கலந்துவிட்ட இந்தத் தொகுதிக்காக பல்வேறு திட்டங்களை நான் முன்னெடுத்து வருகிறேன்.

அந்தவரிசையில் தொகுதி முழுக்க உள்ள மக்களின் வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்தும் வகையில் 'நடமாடும் கலைஞர் நூலக'த்தை தொடங்கியுள்ளோம். கல்வி என்பது யாராலும் திருட முடியாத சொத்து. நம் முதல்வர் மாணவர்களைச் சந்திக்கும் போதெல்லாம் தவறாமல் இந்த வரிகளைத்தான் உச்சரித்து வருகிறார்.
பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் இவை மட்டுமே கல்வி கற்பதற்காக இடங்கள் இல்லை. அதற்கும் மேலாக நூலகங்கள் மூலமாகக் கிடைக்கக் கூடிய அறிவும் பெறக்கூடிய கல்வியும் மிக முக்கியமானது. நான் மட்டும் அல்ல; முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியும் அதைத்தான் நினைத்தார்.

அதனால்தான் உலகத்தரத்திலான அண்ணா நூற்றாண்டு நூலகத்தைச் சென்னையில் பார்த்துப் பார்த்துக் கட்டி அதனை உருவாக்கிக் கொடுத்தார். அதன் தொடர்ச்சியாக முதல்வர் ஸ்டாலின், மதுரையில் கலைஞர் பெயரில் பிரம்மாண்டமான நூலகத்தை உருவாக்கி வருகிறார்" எனப் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்
ட்விட்டர் பதிவில் உதயநிதி பெருமிதம்:
மேலும் ஒரு ட்விட்டர் பதிவில் உதயநிதி ஸ்டாலின், "கலைஞர் நடமாடும் நூலகத்திற்கு #ChepaukTriplicane மக்களிடையே கிடைக்கும் வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. வாரம் முழுவதும் தொகுதியின் 7 வார்டுகளுக்கு பயணிக்கும் நடமாடும் நூலகத்தை முழுமையாகப் பயன்படுத்திடத் தொகுதி மக்களைக் கேட்டுக்கொள்கிறேன். புத்தகம் மூலம் உலகை அறிவோம் வாருங்கள்.
வாசிப்பின் மீதான ஆர்வத்தோடு, #ChepaukTriplicane தொகுதி 62&119-வது வார்டுகளை சேர்ந்த மக்களும், மாணவச் செல்வங்களும் 'கலைஞர் நடமாடும் நூலக'த்திற்கு வந்து புத்தகங்களை எடுத்துச் சென்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்று கிடைத்த வரவேற்பு நாள்தோறும் அதிகரிக்க விரும்புகிறேன்" எனக் கூறியிருக்கிறார்

இதேபோன்ற நடமாடும் நூலகத்தைத் தமிழ்நாடு முழுவதும் ஏற்படுத்த வேண்டும் எனப் பலர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
சுருக்கமாகச் சொன்னால், திமுக ஆட்சிக்கு வந்த இந்த ஒன்றரை ஆண்டுகளில் மாவட்டம் தோறும் உள்ள நூலகங்கள், கிளை நூலகங்கள் அனைத்து புத்துயிர் பெற்றுள்ளன.
மேற்கொண்டு பல பகுதிகளில் திடீரென்று பல புதிய நூலகங்கள் ஆரவாரம் இல்லாமல் மிக அமைதியான முறையில் திறக்கப்பட்டுள்ளன. அப்படி தான் வாழும் குரோம்பேட்டை பகுதியில் திறக்கப்பட்டுள்ள நூலகம் குறித்து மெய் சிலிர்த்து ஃபேஸ் பக்கத்தில் எழுதி இருக்கிறார் எழுத்தாளர் ப. ராகவன்.

குரோம்பேட்டைக்கு வந்த திடீர் நூலகம்:
அவர் தன் பதிவில், "சமூகத்துக்குத் தெரியும், நான் குரோம்பேட்டையின் ஆதிவாசி. சென்ற வாரம் வரை பேட்டையில் நூலகம் என்ற ஓரிடம் கிடையாது. முன்னொரு காலத்தில் (என்றால் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு என்று பொருள்.) ஒரே ஒரு லெண்டிங் லைப்ரரி இருந்தது. என்னைப் போன்ற சில கெட்டவர்களின் கோரத் தாக்குதல்களால் அதுவும் இல்லாமல் போய்விட்டது.
ஒரு சரித்திரச் சம்பவமாகக் கடந்த வாரம் பேட்டையில் அரசு சார்பில் ஒரு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. பெரிய அறிவிப்புகளோ, போஸ்டர்களோ, மைக்செட் களேபரங்களோ இல்லை என்பதால் கவனத்துக்கு வரவில்லை. இரண்டு நாள்களுக்கு முன்னர் என் மனைவி இத்தகவலைத் தெரிவித்தார். அன்பரசன் வந்து திறந்து வைத்திருப்பதாகவும் சொன்னார். அமைச்சர் எங்கள் ஏரியாக்காரர்.
இன்று அந்நூலகத்துக்கு என் மனைவியும் மகளும் சென்று பார்வையிட்டு எடுத்தனுப்பிய புகைப்படங்கள் கீழே உள்ளன. என்னுடைய சில புத்தகங்களும் இதில் இருப்பதை நீங்கள் கண்டுகளிப்பீர்கள். இன்னும் நூலகர் யாரும் நியமிக்கப்படவில்லை என்றும் பகுதி வாழ் மகளிர் சுய உதவிக் குழுவினரே இப்போதைக்குப் பார்த்துக்கொள்வதாகவும் சொன்னார்கள்.

நூலகமே வந்துவிட்ட பின்பு நூலகர் வருவதா ஒரு விஷயம்? 1985 ஜனவரி முதல் நான் பேட்டையில் வசிக்கிறேன். முதல் முறையாக இங்கே அரசு சார்பில் ஒரு நூலகம் அமைக்கப்பட்டிருக்கிறது. இது தரும் மகிழ்ச்சிக்கு நிகரே இல்லை" என்றவர் அடுத்த பதில் அந்த நூலகத்திற்குச் சென்று வந்த அனுபவம் பற்றி எழுதி இருக்கிறார்.
அதில், "நேற்று மாலை என் மனைவியும் மகளும் சென்று வந்த குரோம்பேட்டை அரசு கிளை நூலகத்துக்கு இன்று நான் சென்று வந்தேன். சிஎல்சி சாலையின் லட்சுமிபுரம் எல்லையைத் தொட்டுச் செல்லும் வீதியில் ஒரு சிறிய பூங்காவுக்குப் பக்கத்தில்.
நூலகத்தைப் பார்த்துப்அசந்து போன எழுத்தாளர்
சிறிய நூலகக் கட்டடம்தான். ஆனால் அழகாகக் கட்டியிருக்கிறார்கள். ஒரு வரவேற்பறை, உள்ளே நுழைந்தால் நூலக ஹால். நான்கு புறச் சுவர்களிலும் புத்தக அடுக்குகளை அமைத்துக் கண்ணாடி போட்டிருக்கிறார்கள் (அந்த இடத்துக்கு அது தேவை. தூசு மிகுந்த பகுதி). வெளியே ஒரு கழிப்பறை இருக்கிறது. குடிநீர் வசதி, நல்ல விளக்கொளி, மின் விசிறிகள் என்று எதிலும் குறைவில்லை.
குறைவான புத்தகங்கள்தாம் இருக்கின்றன என்றாலும் பல அரிய, தரமான நூல்கள் உள்ளன. நேற்று கே.என். செந்தில் குறிப்பிட்டிருந்த உவேசா கடிதக் கருவூலத்தை அங்குக் கண்டேன். ப. சிவனடியின் இந்தியச் சரித்திரக் களஞ்சியம் அனைத்துத் தொகுதிகளும் உள்ளன. (வேறு இரண்டு மூன்று இந்திய வரலாறுகளும் உள்ளன.) குபராவின் கட்டுரைகள், கதைகள் தொகுப்பு நூல்கள் உள்ளன.
முழுக்கப் பார்த்தேன் என்று சொல்ல முடியாது. ஓரளவு கவனித்ததில் கதை நூல்கள் அதிகம் இல்லை. நிறையக் கட்டுரைத் தொகுப்புகள் உள்ளன. பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு உதவக்கூடிய புத்தகங்கள் அதிகம். நான் சென்றிருந்த சமயம் சில சிறுவர்கள் ஆர்வமுடன் புத்தகங்களை எடுத்துப் படித்துக்கொண்டிருந்தார்கள். யாரோ ஒரு அம்மா, தன் குழந்தையை அருகே அமர வைத்து ஒரு புத்தகத்தைப் படித்துக் காட்டி விளக்கிக்கொண்டிருந்தார்.
நான் வசிக்கும் பிராந்தியத்தில் இப்படியொரு நூலகம் வந்திருப்பது தனிப்பட்ட முறையில் எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி அளிக்கிறது என்பதைச் சொல்லிப் புரிய வைக்கவே முடியாது. முன்னொரு காலத்தில் குரோம்பேட்டையிலிருந்து அண்ணா சாலை தேவநேயப் பாவாணர் நூலகத்துக்குத் தினமும் சைக்கிளில் சென்று படித்துவிட்டுத் திரும்பியவன் நான். சரியாகச் சொல்வதென்றால் அந்த நூலகம் இல்லாதிருந்தால் இன்று நீங்கள் பார்க்கும் நான் இல்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications