தேர்தல் நெருங்குகிறது..மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்துக்கு நவ.21-ல் வருகை?
சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 21-ந் தேதி தமிழகத்துக்கு வருகை தர உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கூட்டணிகளை வலுப்படுத்துவதிலும் தொகுதி பங்கீடு தொடர்பாகவும் திரைமறைவு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.
வலிமையான கூட்டணி
திமுக தலைமையில் தற்போதைய நிலையில் காங்கிரஸ், இடதுசாரிகள், தலித்துகளின் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள், சிறுபான்மையினர் கட்சிகள் என வலிமையான கூட்டணி உள்ளது. ஆளும் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தெளிவற்ற நிலை நீடிக்கிறது.
நிச்சயமற்ற அதிமுக அணி
அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக, பாமக, தேமுதிக ஆளுக்கு ஒரு நிலைப்பாடு எடுத்துள்ளன. இதனால் அதிமுக கூட்டணியில் இடம்பெறக் கூடிய கட்சிகள் தொடர்பான எந்த ஒரு திட்டவட்டமான நிலையும் ஏற்படவில்லை. இன்னொரு பக்கம் சிறிய கட்சிகள் மிரட்டலாக களத்தில் நிற்கின்றன.
தீர்மானிக்கும் கட்சிகள்
நாம் தமிழர் கட்சி, அமமுக, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஆகியவை அதிமுக, திமுக கூட்டணி கட்சிகளின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கக் கூடிய சக்திகளாக விஸ்வரூபம் எடுக்கும் வாய்ப்பு உள்ளது. பீகார் சட்டசபை தேர்தலில் எல்ஜேபி, ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி ஆகியவையால் கட்சிகளின் வெற்றி தோல்விகள் பாதிக்கப்பட்டிருந்தன என்பதும் நினைவில் கொள்ளத்தக்கது.
மே.வங்கத்தில் அமித்ஷா
இதனிடையே அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறும் மேற்கு வங்கத்தில் அண்மையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். மேற்கு வங்க சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் அமித்ஷாவின் இந்த பயணம் பாஜகவினருக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகம் வருகிறார் அமித்ஷா
இதேபாணியில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் தமிழகத்துக்கும் அமித்ஷா வருகை தர உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. தமிழகத்துக்கு வரும் 21-ந் தேதி அமித்ஷா வருகை தர இருக்கிறாராம். தமிழகத்தில் வேல்யாத்திரையை முன்வைத்து லைம் லைட்டில் இருக்கும் பாஜகவினருக்கு அமித்ஷாவின் வருகை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.