தமிழக எம்பிக்கள் நாகரீகமற்றவர்கள் விமர்சனம்-தமிழகம் முழுவதும் தர்மேந்திர பிரதான் கொடும்பாவி எரிப்பு!
சென்னை: தமிழ்நாட்டு எம்பிக்கள் நாகரிகமற்றவர்கள் என நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் இழிவுபடுத்திப் பேசிய மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கண்டனம் தெரிவித்து அவரது கொடும்பாவியை எரித்து சென்னை திமுகவினர் இன்று போராட்டம் நடத்தினர். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் இந்த ஆணவப் பேச்சுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி உள்ளிட்ட தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு இன்று காலை தொடங்கியது. அப்போது தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழிக் கொள்கை, இந்தி திணிப்பு, தேசிய கல்விக் கொள்கை ஆகியவற்றுக்கு எதிராக திமுக உள்ளிட்ட தமிழகத்தின் இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் கண்டனம் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர்.

அப்போது குறுக்கிட்ட மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழ்நாட்டு எம்பிக்களை நாகரிகமற்றவர்கள் என்று இழிவுபடுத்திப் பேசினார். இது நாடாளுமன்ற லோக்சபாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழக எம்பிக்களின் கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து, தமிழ்நாட்டு மக்களை அவமதித்து பேசிய பேச்சை திரும்பப் பெற்றார் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்.
ஆனால் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் இந்த இழிவான விமர்சனத்துக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இது குறித்து தெரிவிக்கையி தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசும் ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும். தமிழ்நாட்டின் நிதியைத் தராமல் ஏமாற்றும் நீங்கள் தமிழ்நாட்டு எம்.பி.க்களைப் பார்த்து அநாகரிகமானவர்கள் என்பதா? நீங்கள் தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்துகிறீர்கள். பிரதமர் மோடி இதனை ஏற்கிறாரா ? தமிழ்நாட்டு மாணவர்களுக்குரிய நிதியை, எங்களிடம் இருந்து வசூல் செய்த வரியை விடுவிக்க முடியுமா முடியாதா என்பதற்கு மட்டும் பதில் கூறுங்கள் என கடுமையாக எச்சரித்துள்ளார்.
இதேபோல தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் தர்மேந்திர பிரதானுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி எம்பி தர்மேந்திர பிரதானுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்துள்ளார். இது தொடர்பாக கனிமொழி எம்பி கூறுகையில், தமிழக எம்பிக்கள் நாகரீகமற்றவர்கள் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியத்உ வேதனை தருகிறது. சர்வ சிக்ஷா அபியான் திட்ட நிதியை விடுவிப்பது தொடர்பாகவே மத்திய கல்வி அமைச்சரை தமிழக எம்பிக்கள் சந்தித்தோம். அப்போது புதிய தேசிய கல்வி கொள்கையில் சில பிரச்சினைகள் இருக்கிறது, அதனை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது என தெளிவாகவே கூறிவிட்டோம். மும்மொழி கொள்கை ஏற்றுக் கொள்ள கூடியது அல்ல; புதிய தேசிய கல்வி கொள்கையை முழுமையாக ஏற்று கொள்ள முடியாது என தெளிவாகவும் கூறினோம் என்றார்.
மேலும் தர்மேந்திர பிரதானின் இந்த பேச்சால் கொந்தளித்த சென்னை திமுகவினர் சைதாப்பேட்டை பகுதியில் அவரது கொடும்பாவியை எரித்து கண்டனம் தெரிவித்தனர். தமிழ்நாட்டின் பல இடங்களிலும் தர்மேந்திர பிரதானின் கொடும்பாவியை திமுகவினர் எரித்து எதிர்ப்புத் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரியில் போராட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகர திமுக சார்பில், பேருந்து நிலையம் முன்பாக திமுக மாநகர அவைத்தலைவர் செந்தில்குமார் குமார் தலைமையில் தர்மேந்திர பிரதான் உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications