எல்.முருகனுக்கு வரவேற்பு அளித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ... சத்தியமூர்த்தி பவனுக்கு வந்த புகார் தூது..!
சென்னை: திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் வரவேற்பு அளித்த விவகாரம் சத்தியமூர்த்தி பவன் வரை எதிரொலித்துள்ளது.
மீனவர்களின் குறைகளை நேரில் கேட்டறிவதற்காக மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று பழவேற்காடு சென்றிருந்தார்.
அப்போது அவரை தடபுடலாக வரவேற்றதோடு மட்டுமல்லாமல் எல்முருகனுடன் ஒரே மேடையில் அமர்ந்து நிகழ்ச்சி முடியும் வரை காங்கிரஸ் எம்.எல்.ஏ. உடனிருந்தது குறிப்பிடத்தக்கது.
தேடி வரும் பஞ்சாப் முதல்வர் பதவி- நிராகரிக்கும் அம்பிகா சோனி? சீக்கியரை முதல்வராக்க வலியுறுத்தல்!
மத்திய இணை அமைச்சர்
மீன்வளத்துறை மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழகம் முழுவதும் மீனவர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார். அந்தவகையில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பழவேற்காட்டுக்கு சென்ற எல்.முருகன் மீனவ கிராம மக்களை சந்தித்து அவர்களின் கோரிக்கை மனுக்களை பெற்றார். இந்த நிகழ்ச்சிகாக வந்த எல்.முருகனை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரைசந்திரசேகர் உற்சாகம் பொங்க பொன்னாடை அணிவித்து வரவேற்று மேடைக்கு அழைத்துச்சென்றார்.
ஒரே மேடையில்
மேலும், சுமார் ஒரு மணி நேரம் எல்.முருகனுடன் ஒரே மேடையில் அவரருகே அமர்ந்து, பழவேற்காடு பகுதி மீனவர்களின் பிரச்சனைகளை எடுத்துக்கூறினார். காங்கிரஸ் எம்.எல்.ஏ. கூறிய கோரிக்கைகளை குறிப்பெடுத்து வைத்துக்கொண்ட மத்திய இணையமைச்சர் எல்.முருகன், அதன் மீது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதனிடையே உள்ளூர் அரசியலில் துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ.வுக்கு எதிரான ஒரு டீம் இதை சத்தியமூர்த்தி பவன் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளது.
அரசியல் நாகரீகம்
பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரும், மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாக இருந்தவர்கள். இதனால் வழக்கறிஞர்கள் என்ற முறையில் அவர்கள் இருவருமே ஒருவரை ஒருவர் ஏற்கனவே தெரிந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. இதனிடையே இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த விரும்பாத கே.எஸ்.அழகிரி, அரசு விழாவில் அரசியல் நாகரீகம் கருதி இவ்வாறு நடந்திருக்கலாம் என எண்ணுகிறார்.
எல்.முருகன் மகிழ்ச்சி
காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் அளித்த வரவேற்பால் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மகிழ்ச்சியடைந்தார். நிகழ்ச்சி முடியும் வரை அவ்வப்போது அவர்கள் இருவரும் பேசிக்கொண்டே இருந்தனர். இதனை மேடைக்கு கீழே இருந்த காங்கிரஸாரும், பாஜகவினரும் புருவம் உயர்த்தியபடி பார்த்துக் கொண்டிருந்தனர்.