கண்டைன்மெண்ட் மண்டலத்தில் எந்த மாதிரி விதிமுறைகள் அமல்? முழு விவரம்
சென்னை: கண்டைன்மெண்ட் பகுதிகளில் ஜூலை மாதம் 31ம் தேதி வரை லாக்டவுன் நடைமுறை தொடரும் என்று மத்திய அரசு அறிவித்தது. இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கண்டைன்மெண்ட் பகுதிகளில் எந்த மாதிரியாக விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், தங்கள் மாவட்டத்தில் உள்ள கண்டைன்மெண்ட் பகுதிகளை வெப்சைட்டில் தெரிவிக்க வேண்டும். இந்த பகுதிகளில் அத்தியாவசிய பணிகள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
கண்டைன்மெண்ட் பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறுவது அல்லது அந்த பகுதிகளுக்குள் மக்கள் செல்வது தடுக்கப்படும். அவசரம், அத்தியாவசிய பொருள் சேவை உள்ளிட்டவற்றுக்கு மட்டும் இதில் விதிவிலக்கு உண்டு.
கண்டைன்மெண்ட் பகுதிகளில் நடைபெறக்கூடிய நடவடிக்கைகளை மாநில அரசுகள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். கண்டைன்மெண்ட் பகுதிகளுக்கு வெளியே குறிப்பிட்ட தூரம் அளவுக்கு பஃபர் ஜோன் என்று அழைக்கப்படும். அவற்றை அடையாளம் காணும் பணிகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.
65 வயதுக்கு மேற்பட்ட நபர்கள், இணை நோய்கள் உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஆகியோர் வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மருத்துவ தேவை அல்லது மிக அத்தியாவசியமான பணிகளை தவிர்த்து இவர்கள் வெளியே வரக்கூடாது. ஆரோக்கிய சேது செல்போன் செயலியை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, பொதுவான அறிவுரையாக, அனைவருமே முக கவசம் அணிய வேண்டும், 6 அடி இடைவெளி விட்டு சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும், கடைகளிலும் இது பின்பற்றப்படுவது கண்காணிக்கப்பட வேண்டும். கூட்டமாக மக்கள் சேர்வது தடை செய்யப்பட வேண்டும், பொது இடங்களில் எச்சில் துப்பக் கூடாது, பொது இடங்களில் மதுபானம் குடிப்பது, பான் மசாலா உட்கொள்வது, குட்கா, புகையிலை போன்றவை உட்கொள்வது தவிர்க்கப்படவேண்டும். கூடுமானவரை வீட்டிலிருந்தே பணியாற்ற ஊக்கப்படுத்தப்பட வேண்டும். இந்த தகவல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.