Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கச்சத்தீவை மீட்கும் வரை.. 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுங்க.. விஜய் சொன்ன பாயிண்ட்.. நோட் பண்ணுங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கச்சத்தீவு மீட்கப்படுவதே மீனவர்களின் பாதுக்காப்புக்கான நிரந்தர தீர்வு என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். 1974ஆம் ஆண்டு கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதற்கு திமுகவே காரணம் என்று விமர்சித்துள்ள விஜய், இலங்கை செல்லும் பிரதமர் நரேந்திர மோடி கச்சத்தீவு இந்தியாவின் உரிமை நிலை என்ற பயண திட்டத்தை முதன்மையாக வடிவமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1974ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு சட்டசபையில் கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி 4வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Until Katchatheevu Recovery Atleast take it as Lease for 99 Years says TVK Leader Vijay ahead of PM Modi travel to Srilanka

திமுக கொண்டுவந்த தீர்மானம்

தற்போது பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், கச்சத்தீவை திரும்ப பெற வேண்டும் என்று தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வாகும் என்று தீர்மானத்தின் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி இருந்தார். இந்த தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் திமுக நாடகம் போடுவதாக விமர்சித்தனர்.

மத்திய, மாநில அரசின் கடமை

இந்த நிலையில் கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், கச்சத்தீவு மீட்கப்படுவதே மீனவர்கள் பாதுகாப்புக்கான நிரந்தரத் தீர்வாகும். ஐ.நா.வின் கடல்சார் சட்டப் பிரகடனத்தை இலங்கை அரசு எப்போதும் மதித்துக் கடைப்பிடிக்க வேண்டும். மீனவர்களின் உயிரையும் உணர்வையும் பாதுகாப்பதே ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் தலையாய கடமையாகும்.

திமுகவே காரணம்

அதேபோல் மீனவர்கள் நலன் மற்றும் கச்சத்தீவு சார்ந்த தமிழக வெற்றிக் கழகப் பொதுக்குழுத் தீர்மானம் தந்த அழுத்தம் தான், தமிழ்நாடு அரசைத் தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடான கச்சத்தீவு மீட்பு மற்றும் மீனவர் பாதுகாப்பு நிலைப்பாடு நோக்கி நகர வைத்துள்ளது. 1974ல் கச்சத்தீவு கைவிட்டுப் போகக் காரணம், ஆட்சி அதிகாரப் பசி கொண்ட அன்றைய ஆளும்கட்சியான திமுக தான்.

திமுகவின் நாடகம்

1999ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை மத்திய அரசுகள் இயங்கியதே திமுகவின் தயவினால்தான். அத்தகைய நிலையில், அப்போதெல்லாம் கச்சத்தீவு விவகாரத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, இப்போது மட்டும் தனித் தீர்மானம் என்ற கண்துடைப்பு நாடகம் ஏன்? இந்தக் கேள்வியே தமிழக மக்களிடமும் எழுந்துள்ளது.

தவெக கண்டனம்

அன்று முதல் இன்றுவரை மத்திய அரசுக்கு, வாஞ்சையோடு வருடிக் கொடுத்து, மறைமுக அன்பை வெளிப்படுத்தும் கடிதம் எழுதும் கபட நாடகம் மட்டுமே இந்த வெற்று விளம்பர மாடல் திமுக அரசின் மாயாஜால வித்தை. அதிகார மையமாக இருக்கும்போதெல்லாம் கை விட்டுவிட்டு, 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால், இப்போது தனித் தீர்மானம் இயற்றும் கபட நாடகத் திமுக அரசின் அந்தர் பல்டி அரசியலைத் தவெக கண்டிக்கிறது.

தமிழக மீனவர்களை கைவிடுவது ஏன்?

இலங்கைக் கடற்படையின் தாக்குதலால் தமிழக மீனவர்கள் இதுவரை 800-க்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர். அவர்களின் உடைமைகளும் வாழ்வாதாரமும் பறிக்கப்பட்டுவிட்டன. குஜராத் போன்ற மற்ற மாநில மீனவர்களுக்காக மட்டும் பாதுகாப்பாக வைத்திருக்கும் மத்திய அரசு, எங்கள் தமிழக மீனவர்களை மட்டும் கை விடுவது ஏன்?

பாஜகவுக்கு கண்டனம்

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அரசின் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் மத்திய பாஜக அரசு, கச்சத்தீவு மற்றும் தமிழக மீனவர்கள் விவகாரத்தில் பாரபட்சத்துடன் பாராமுகமாகவே இருக்கிறது. எப்போதும் மீனவ நண்பனாகவே, உண்மையான உறுதியுடனும் உணர்வுடனும் நிற்கும் தமிழக வெற்றிக் கழகம், மத்திய பாஜக அரசின் இந்தப் போக்கைத் தீர்க்கமாகக் கண்டிக்கிறது.

கச்சத்தீவை குத்தகைக்கு பெற வேண்டும்

கச்சத்தீவு மீண்டும் நமது நாட்டுக்குச் சொந்தமாவது மட்டுமே தமிழக மீனவர் பிரச்சினைக்கு ஒரே பரிகாரம் மற்றும் தீர்வாகும். நிரந்தரத் தீர்வை எட்டும் வரை, இடைக்காலத் தீர்வாக 99 வருடக் குத்தகையாகக் கச்சத்தீவைப் பெற வேண்டும். இதற்கான ஒப்பந்தத்தை மத்திய அரசு எவ்விதச் சமரசமும் இன்றி நிறைவேற்ற வேண்டும்.

தவெகவின் தீர்மானம்

பிரதமர் நரேந்திர மோடி கட்டாயமாக இலங்கை அரசிடம் இதை வலியுறுத்திப் பெற வேண்டும். அதேபோல் இலங்கைத் தமிழர்களின் வாழ்வும் பாதுகாப்பும் அமைதியும் நிம்மதியும் நிரந்தரமானதாக இருக்க, பொது வாக்கெடுப்பு மட்டுமே ஒரே தீர்வு. நம் கழகத்தின் பொதுக்குழுத் தீர்மானமும், தீர்க்கமான நிலைப்பாடும் பொது வாக்கெடுப்பே.

இந்தியாவின் உரிமை நிலம்

இந்நிலையை நோக்கி நகர, சர்வதேச சமூகத்தை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும். போர்க் குற்றங்களுக்காகக் கண்டிப்பதோடு, நடுநிலையான பொது வாக்கெடுப்பு நடத்த, இலங்கை அரசுக்கு மத்திய பிரதமர், நேரடியான அரசியல் அழுத்தம் கொடுக்க வேண்டும். இலங்கை செல்லும் நம் பிரதமர் மோடி, கச்சத்தீவு இந்தியாவின் உரிமை நிலம் என்ற பயணத் திட்டத்தை முதன்மையாக வடிவமைக்க வேண்டும்.

விஜய் வலியுறுத்தல்

நமது மீனவர்களின் துயர் நீங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்ற விதத்தில் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஒன்றிய பிரதமரின் இந்த இலங்கைப் பயணம், தமிழக மீனவர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்கள் வாழ்வில் ஒளியேற்றுவதாக மட்டுமே இருக்க வேண்டும். தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக, சமரசமின்றி இவை அனைத்தையும் வலியுறுத்துகிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+